PUBLISHED ON : ஏப் 18, 2016

சங்கர்: லீவுக்கு அடிக்கடி மாமா வீட்டுக்குப் போயிடறே. அத்தி பூத்த மாதிரி எப்பவாவதுதான் உன்னைப் பாக்க முடியுது மஞ்சு.
முன்னா: இல்லையே அடிக்கடி அது பூக்கறதை மாமா வீட்டுல பாக்கறனே.
ச: பாத்திருக்கியா. அத்திப் பழம் சாப்பிட்டிருக்கியா?
மு : ச்சே... அதுல ஏது பழம்? நீளநீளமா குச்சியாய்க் காய்க்கும். மாமா வீட்டுல வளர்ற ஆடுகள் எல்லாம் அதை விரும்பிச் சாப்பிடும்.
ச : அடிப்பாவி! புரிஞ்சு போச்சு. நீ அகத்தியைச் சொல்றேன்னு நினைக்கிறேன்.
மு : ஆமால்ல. இப்ப ஞாபகம் வந்திடுச்சு அது அகத்திதான். அதென்ன அத்தி?
ச : அத்திப் பழம் ரொம்ப ஆரோக்கியமான உணவுப் பொருள். நிறையப் பேர் அதை விரும்பிச் சாப்பிடமாட்டாங்க. அபூர்வமாப் பூக்கும். காய்க்கறதுலகூட ஒரு சிறப்பு இருக்கு.
மு : அது என்ன சிறப்பு?
ச : மாமரத்துல எல்லாம் ஒரு பூவிலிருந்து ஒரு பழம்தான் உண்டாகும். சீத்தாப் பழத்துல ஒரு பூவிலிருந்தே பல கனிகள் உண்டாகும். ஆனா, பூங்கொத்துல இருக்கற பல பூக்கள் சேந்து ஒரு காய் உருவாகிக் கனியா மாறுறதுதான் அத்திப் பழம்.
மு : அத்தி, அகத்தின்னு குழப்பமா இருக்கே. அத்திக்கு வேற பேரு இல்லியா?
ச : சங்ககாலத்துல இதோட பெயர் 'அதவம்'. 'ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து எழு குளிரு மிதித்த ஒரு பழம் போலக் குழையக் கொடியோர் நாவே...'ன்னு குறுந்தொகைப் பாட்டு இருக்கு.
மு : என்னது குளிரா?
ச : இந்தப் பாட்டுல வர்ற குளிருவுக்கு நண்டுன்னு அர்த்தம். 'ஏழு நண்டுகள் கொத்திக் குதறுன அத்திப் பழம் போல ஆகிப்போச்சு நிலைமை'ன்னு அந்த வரி சொல்லுது...
மு : இன்னிக்கு அத்தியப் பத்தி 'ஆத்தீ'ன்னு அசந்து போற அளவுக்கு தகவல் சொல்லிட்டே! அதவிட, நண்டுன்னா குளிர்ன்னு அர்த்தம் சொன்னது வெயிலுக்கு இதமாக இருக்கு!
