PUBLISHED ON : நவ 04, 2019
கீழடியில் கிடைத்த கரிமப்பொருட்கள், அமெரிக்க புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டன. பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த கரிமத்தின் காலம் கி.மு.580 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி கி.மு.6ஆம் நூற்றாண்டி லிலிருந்து கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை வளமிக்கப் பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் நகரமயமாதல் கி.மு.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் தொடங்கியது என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே வைகை நதிக்கரையில் நகர நாகரிகம் திகழ்ந்ததை அறியமுடிகிறது.
தமிழி எழுத்தின் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு என கொடுமணல், அழகன்குளம், பொருந்தல் ஆய்வுகளால் எண்ணப்பட்டு வந்தது. ஆனால், அதன் காலம் அதற்கும் முந்தையது என்பதை கீழடியின் தமிழி எழுத்துகள் உறுதிப்படுத்துகின்றன.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 70 எலும்புத்துண்டுகளின் மாதிரிகள் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டன. அங்கு செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்கு இவை உரியன என்று கண்டறியப்பட்டுள்ளன.
கட்டடங்களைப் பார்க்கும்பொழுது அவற்றில் பயன்பட்டுள்ள செங்கற்கள், தமிழகத்தில் பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் சங்கம் இயங்கியதற்கான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டிகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. ஒவ்வொரு தொட்டியிலிருந்தும் சிறு கால்வாய் வழியாக அடுத்த தொட்டிக்கு நீர் செல்லுமாறு அமைக்கப்பட்டு கடைசியாக ஒரு பெரிய கால்வாய் வழியாக முழு நீரும் வெளியேறி ஆற்றில் கலக்கும்படி அமைந்துள்ளது. இத்தொழிலகம் சாயத்தொழில் நடைபெற்ற இடமாகவோ, ஆயுதங்கள் அணிகலன்கள் செய்யப்பெற்ற தொழில கமாகவோ இருந்திருக்கக் கூடும்.
உறைகிணற்று சுடுமண் உறையை வைத்து பழந் தமிழரின் தொழில்நுட்பத் திறனை அறியமுடிகிறது.
நெல் கருக்காயினை சேற்றில் குழைத்து அமைத்து அதன் மேல்புறமும், அடிப் புறமும் சாதாரண சேற்றினைக் குழைத்து நெருப்பில் சுட்டு எடுக்கப் படும் உறையினை பழந்தமிழகத்தில் கிணறு கட்டுமானத்திற்குப் பயன் படுத்துவர். இவ்வுறை இருபுறமும் சிவப்பு, மையப்பகுதி கருமை என அமைந்திருக்கும். இத்தகு உறைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன.
- முனைவர். மணி. மாறன்
