PUBLISHED ON : பிப் 24, 2020

ஒரு மீனால் எவ்வளவு நேரம் தண்ணீருக்கு வெளியே இருக்க முடியும்? வீட்டில் வளர்க்கும் மீன்கள், தொட்டியில் தண்ணீரை மாற்றும்போது கொஞ்ச நேரம் வெளியே இருந்தாலே சிரமப்படும். ஆனால், சில வகை மீன்கள் நீரின் மேற்பரப்பிற்கு வந்து காற்றைச் சுவாசிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?
மீன்களில் பல வகைகள் உள்ளன. அவை வெவ்வேறு விதமான சுவாச திறன்களைக் கொண்டுள்ளன. ஆகையால், ஒரு மீன் நீரிலிருந்து வெளியே வந்த பிறகு, எவ்வளவு நேரம் உயிர்வாழ முடியும் என்பதைச் சரியாக கூற முடியாது. அது அவற்றின் திறனைப் பொறுத்தது.
முதலில், மீன்கள் நீருக்கடியில் எவ்வாறு சுவாசிக்கிறது என்பதைப் பற்றி அறிந்துகொண்டால், அவை எப்படி காற்றைச் சுவாசிக்கிறது என்பதைப் பற்றியும் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். எல்லாக் கடல் உயிரினங்களையும் போலவே, மீன்களுக்கும் உயிர்வாழ தண்ணீர் தேவை. அவை நம்மைப் போலவே ஆக்சிஜனைச் சார்ந்துள்ளன. பெரும்பாலானவை,
தண்ணீரிலிருந்தே ஆக்சிஜனைப் பெறுகின்றன.
நமக்கு நுரையீரல் போல, மீன்களுக்கு செவுள்கள். அவற்றின் தனித்துவமான சுவாச அமைப்புகள், தேவையற்ற வாயுக்களை வெளியேற்றும். அதே சமயம் செவுள்களின் மேற்பரப்பில் காணப்படும் சிறிய இரத்த நாளங்களைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி, அதிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்துக்கொள்ளும். உதாரணமாக சில மீன் வகைகளைப் பார்ப்போம்.
1. சதுப்பு நில மீன்கள் (Mangrove Fishes)
கில்லி ஃபிஷ் (Mangrove Killifish) போன்ற சதுப்புநில மீன்வகைகள் நிலம், நீர் என இரண்டிலும் வாழக் கூடியவை. அவை நீரை விட்டு வெளியே வரும் போது, தோலின் மூலம் ஆக்சிஜனை எடுத்துச் சேமித்துக் கொள்ளும். நீருக்குள் சென்ற பிறகு செவுள்களைப் பயன்படுத்தும்.
2. பெருங்கடல் மீன்
சிறிய அலகு கொண்ட ஓங்கில்கள் (Short-beaked dolphins), நீலத் திமிங்கிலங்கள் (Blue whales), பெலுகா திமிங்கிலங்கள் (Beluga whales) போன்றவை பாலூட்டிகள். அவை கடலில் வாழ்வதால் மீன்களைப் போன்றது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். பாலூட்டிகள் என்பதால் அதற்கு நுரையீரல் உண்டு. அதனால் நீர் இல்லாமல் வெகுநேரம் தாக்குப் பிடிக்க முடியும். உள் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், அவற்றால் நிலத்திலேயே வாழ முடியாது.
3. மட்ஸ்கிப்பர்ஸ் (Mudskippers)
நிலம், நீர் என இரண்டிலும் வாழக் கூடியவை. தோலின் மேற்பரப்புக்கு அருகே இரத்த நாளங்களைக் கொண்டுள்ளன. எனவே செவுள் அல்லது நுரையீரல் என இரண்டையும் அதிகம் பயன்படுத்தாமலே, ஆக்சிஜனை தங்கள் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சிவிடும்.
- சௌம்யா

