PUBLISHED ON : ஏப் 18, 2016

உலகில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்டில் பாதியை ஐரோப்பியர்கள் சாப்பிடுகிறார்கள்! ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னர்வரை இப்படி ஓர் அருமையான பண்டம் இருந்தது அவர்களுக்குத் தெரியாது. கோக்கோ மரத்தின் கொட்கைகளில் இருந்துதான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இது அமெரிக்கப் பகுதிக்குச் சொந்தமான மரம். எனவே அமெரிக்காவில் குடியேறிய காலத்தில்தான் ஐரோப்பியர்களுக்கு சாக்லேட் பற்றித் தெரிய வந்தது.
ஏறத்தாழ 3,500 வருடங்களுக்கு முன்னால் தென் அமெரிக்கப் பகுதியில் ஓல்மெக் (Olmec), மாயா (Maya), டோல்டெக் (Toltec) போன்ற பழங்குடி சமூகங்கள் இருந்தன.
இந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கோக்கோ கொட்டைகளைப் பயன்படுத்தி ஒரு வித பானம் தயாரித்துக் குடித்து வந்தார்கள். அதற்கு சாக்கோலாட்டில் (Chocholatl) என்று பெயர். (நாம் தற்போது குடிக்கும் ஹாட் சாக்லேட்டில் சர்க்கரை போடாமல் இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் சாக்கோலாட்டில்.)
இவர்கள், சாக்லேட்டின் தோற்றத்தைக் கடவுள் நம்பிக்கையோடு தொடர்புபடுத்திக் கதைகள் சொல்லி வந்தார்கள். இவர்களின் மத வழிபாட்டுச் சடங்குகளில் கோக்கோ கொட்டைகள் இடம் பெற்றன.
அமெரிக்காவின் ஏஸ்டெக் (Aztec) சமூகத்தில் எல்லோரும் சாக்லேட் சாப்பிட அனுமதி இல்லை. வயதுவந்த ஆண்களும், பூசாரிகளும், அரசாங்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர்களும், ராணுவ அதிகாரிகளும், ராணுவத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களும் மட்டுமே சாப்பிடலாம் என்ற விதி இருந்தது. சாக்லேட் பானம் போதை தரக்கூடியது என நம்பி, பெண்களும் குழந்தைகளும் அதைக் குடிக்கத் தடை போட்டு இருந்தார்கள்.
அமெரிக்கப் பழங்குடி நாகரிகங்களில், கோக்கோ கொட்டைகளைப் பணம் மாதிரியான ஒரு மாற்றுப் பொருளாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முயலின் விலை பத்து கோக்கோ கொட்டைகள். ஒரு கொழுத்த வான்கோழியின் விலை நூறு கோக்கோ கொட்டைகள். இது 16ஆம் நூற்றாண்டின் நிலவரம்.
ஒரு கோக்கோ மரம் வருடத்திற்கு 50 பழங்கள் மட்டுமே காய்க்கும். ஒரு பழத்தில் 40 கோக்கோ கொட்டைகள்வரை இருக்கும். ஒரு பழக் கொட்டைகளில் 8 சாக்லேட் பார்கள் தயாரிக்கலாம். ஆக ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்தில் ஏறத்தாழ 400 சாக்லேட் பார்களைத் தயாரிக்கலாம். மிகவும் அரிதான பொருளாக இருந்த காரணத்தால் பணத்துக்கு நிகரான மதிப்பைப் பெற்று இருந்தது.
