தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூக்களின் நிற வேதியியல்

பூக்களின் நிற வேதியியல்

பூக்களின் நிற வேதியியல்


PUBLISHED ON : ஆக 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆயிரமாயிரம் வண்ணங்களில் அழகழகாய்ப் பூக்கள். ஒவ்வொரு நிறத்துக்கும் சொந்தக்கார நிறமி வேதிப்பொருள் இருக்கிறதா? பெயிண்ட் பாக்ஸில் உள்ள ஒரு சில நிறங்களைச் சேர்த்தும் குழைத்தும் பல்வேறு நிறங்களை நாம் ஓவிய வகுப்பில் தீட்டுவது போலத்தான், தாவரங்கள் பொதுவாக ஒரு சில நிறமி வேதிப்பொருட்களை வைத்து, குழைத்து பல்வேறு நிறங்களை பூக்களுக்கு தந்து, வண்ண வண்ணப் பூக்களைத் தயார் செய்கின்றன. 'ஃப்ளாவோனோயிட்' (Flavonoid), 'கரோட்டின்' (Carotene), 'பச்சையம்' (Chlorophyll) ஆகிய மூன்று அடிப்படை வேதிப்பொருட்களின் வெவ்வேறு விகிதக் கூட்டு. இதுவே, பூக்களின் பல்வேறு நிறங்களையும் நிற சாயல்களையும் உருவாக்குகிறது.

அந்தோசயனின்' (Anthocyanin), 'ஃப்ளாவோன்' (Flavon) மற்றும் 'ஃப்ளாவோனல்' (Flavonal) முதலிய வேதிப்பொருட்களையே ஃப்ளாவோனோயிட் (Flavonoid) வகை சார்ந்த வேதி நிறமிகள் எனக் கூறுகிறோம். பூக்களில் காணப்படும் கருஞ்சிவப்பு, ஊதா, நீலம், பிங்க், மேஜெண்டா ஆகிய நிறங்களை அந்தோசயனின் வகை வேதிப்பொருட்கள் உருவாக்குகின்றன. ஃப்ளாவோன், ஃப்ளாவோனால் நிறமிகள், மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகின்றன. தக்காளி, காரட் போன்ற காய்கனிகளில் ஏற்படும் மஞ்சள், சிவப்பு ஆரஞ்சு முதலிய நிறங்களை கரோட்டின் தருகிறது. மேலும், மஞ்சள் நிறத்தை மட்டுமே தரும் 'சைன்தொபில்' (Xanthophyll) என்ற கரோட்டின் வகை வேதிப்பொருள் உண்டு. பச்சை நிறத்தை பச்சையம் தருகிறது. பொதுவாக பச்சையம் இலைகளில் இருந்தாலும், சில சமயம் பூக்களிலும் அமைந்து பச்சை நிறச் சாயலை ஏற்படுத்தும். இந்த வகை வேதிப்பொருட்களின் கூட்டுக் கலவைதான், நாம் காணும் பல்வேறு நிறங்கள்; நிறங்களின் சாயல்கள்.

தோட்டத்துக்குச் சென்று, தாவரங்களை குறிப்பாக அதன் இலைகளைப் பாருங்கள். வேம்பின் இலைகள் இளம் பச்சை நிறத்தில் காட்சி தரும்போது, மாமர இலைகள் கரும்பச்சையில் காட்சி தருகின்றன அல்லவா? புல் பச்சையும், வெற்றிலையின் பச்சையும் ஒன்றல்ல; இலைகள் பச்சை நிறம் கொண்டவை என்றாலும், அவற்றிலும் எவ்வளவு வித்தியாசம்!

இலைகள் பச்சையாகத் தென்படுவதற்கு, அதில் உள்ள 'குளோரோபில்' (Chlorophyll) எனப்படும் பச்சையம்தான் காரணம் என, நீங்கள் அறிந்திருக்கக்கூடும். a, b, c1, c2, d, f என்கிற ஆறு வகை பச்சையங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனி மூலக்கூறுகள்தாம். அவற்றின் வடிவத்தில் சில பொதுத்தன்மை இருப்பதால், இவற்றை 'பச்சையம்' எனத் தொகுத்துக் கூறுகிறோம். தாவரங்களில் பெரும்பான்மை தாவரங்கள், 'a' மற்றும் 'b' வகை பச்சையம்தான் கொண்டுள்ளன. 'a' வகை பச்சையம், நீலம் கலந்த பச்சை நிறத்தையும், 'b' வகை பச்சையம், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தையும் தரும். இரண்டின் கலவைகளே பல்வேறு பச்சை நிறச் சாயலில் இலைகளைத் தருகின்றன. வெயிலில் வளரும் தாவரங்கள் பொதுவாக கூடுதல் 'a' வகை பச்சையம் கொண்டு இளம்பச்சை நிறத்தில் அமையும். நிழலில் வளரும் தாவரத்தில், 'b' வகை பச்சையம் தூக்கலாக அமைந்து, கரும்பச்சை நிறத்தில் இலைகள் காட்சி தரும்.

சில சமயம், நிறத்தின் சாயல் வெறும் காட்சி மயக்கமாகக்கூட இருக்கலாம். அடர் மஞ்சள் பூ வெயில் காலத்தில் சற்றே பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலும், குளிர் காலத்தில் சிவப்பு சாயல் கொண்ட மஞ்சள் நிறத்திலும் நமக்கு காட்சியளிக்கும். வெயில் காலத்தில் எங்கும் பசுமை பூரித்துக் கிடக்கும் நிலையில், எல்லாத் திசையிலும் கூடுதல் பச்சை நிறம் உள்ள நிலையில் நமது மூளை கூடுதல் பச்சை நிற ஒளிக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும்போது ஏற்படும் காட்சி மயக்கமே இது என்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.

- த.வி.வெங்கடேஸ்வரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us