PUBLISHED ON : ஜூன் 03, 2019
வண்ணங்களை அறிந்துகொள்ளுதல் என்பதும் ஒரு கற்றல்தான். முற்கால இலக்கியங்களில் புலவர்கள் வண்ணங்களைப் புரிந்துகொள்ள சில உத்திகளைக் கையாண்டுள்ளார்கள். அவற்றில் நாம் அறிந்த வண்ணத்தைக் கொண்டு, அறியாத ஒன்றின் வண்ணத்தைப் புரிய வைத்தனர். பீர்க்கம்பூவின் வண்ணத்தைப் புரிந்துகொள்ள 'நெடுநல்வாடை' என்னும் நூலில், நக்கீரர் 'பொன்போல் பீரமுடன் புதல்புதல் மலர' என்று குறிப்பிடுகிறார். அதாவது பீரம் (பீர்க்கங்காய்) பொன் போன்ற (தங்கத்தின்) நிறத்தில் புதர்கள் தோறும் மலர்ந்துள்ளது என்கிறார்.
பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார், தாமரை மலரின் வண்ணத்தைக் குறிப்பிட, நெருப்பு மூண்டெரிவது போன்ற நிறம் என்கிறார் ('எரியகைந் தன்னவேண்டில் தாமரை ').
மணிமே கலையில் விருச்சிக முனிவர், உண்ண இருந்த நாவல் பழத்தின் நிறத்தை, பெரிய பனம்பழம் போன்ற கரிய நாவல் என்கிறார் சாத்தனார். (பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனியனையதோர் இருங்கனி நாவற் பழமொன்றேந்தி).
- க. அன்பழகன்

