PUBLISHED ON : அக் 28, 2019

வெந்தயம்
ஆங்கிலப் பெயர் : ஃபெனுகிரீக் (Fenugreek)
தாவரவியல் பெயர் : டிரிகொனெல்லா ஃபோனும்கிராகம் (Trigonella foenum-graecum)
தாயகம் : கிரேக்கம்
நம் வீடுகளில் அதிகபட்சம் சாம்பாருக்கு மட்டுமே வெந்தயம் சேர்ப்போம். எப்போதாவது வயிற்றுவலி வந்தால், உடல் சூட்டைக் குறைப்பதற்கு வெந்தயம் போட்டு மோர் குடிப்போம். பலருக்கு வெந்தயம் என்றாலே கசக்கும் என்ற பயம் உண்டு. அதனால் எண்ணி எண்ணி சமையலில் சேர்ப்போம். சில வீடுகளில் சித்த மருத்துவத்தின் மேல் நம்பிக்கை உள்ள பெரியவர்கள், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவார்கள். இதனால் உடற்சூடு குறையும்.
இந்தியா முழுவதும் சமையலில் வெந்தயம் எப்படிச் சேர்க்கிறார்கள் என்று தேடியபோது, இராஜஸ்தான் மாநிலம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இங்கு, வெந்தயம் இல்லாமல் லட்டுகூட செய்யமாட்டார்கள் தெரியுமா?
மட்டன், கறி சமையல், பராத்தா, சப்பாத்தி என, எல்லாவற்றிலும் வெந்தயம் தான் முதலில் சேர்க்கப்படும்.
இந்தியாவில், இராஜஸ்தான் மாநிலத்தில்தான் வெந்தயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் இந்தியாவிற்கு வெந்தயம் அறிமுகமானது.
இராஜஸ்தானில், தலைமுறை தலைமுறையாக ஒரு பழக்கம் உள்ளது. பிரசவித்த பெண்களுக்கு ஒரு லட்டு கொடுப்பார்கள். அதில் வெந்தயம்தான் அதிகம் சேர்க்கப்படும். வெந்தயம் சேர்த்தால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும் என்கிறார்கள்.
இந்தியாவில் எங்கு போனாலும் 'மேத்தி' என்றாலே வெந்தயத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், வெளிநாடுகளில் சாத்தியமா? இந்தியாவிற்கு அடுத்து ஈரானில் சமையலில் வெந்தயம் அதிகம் சேர்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் வெந்தயம் கிடைக்கும். ஈராக்கில் தொல்லியல் ஆய்வு செய்தபோது, உலகின் பழமையான வெந்தயம் கண்டு எடுக்கப்பட்டது.
வெந்தயத்தை நீங்கள் ஓரிடத்தில் நிச்சயம் வாங்க முடியாது. 'ஃபெனுகிரீக்' என்பதுதானே இதன் ஆங்கிலப் பெயர். ஆம்! அப்படியென்றால் கிரேக்க நாட்டைத் தாயகமாகக் கொண்டது. ஆனால், நீங்கள் கையில் எடுத்துக் கொண்டு, “இது வேண்டும்” என்றால், இல்லை என்ற பதில்தான் வரும்.
கிரேக்க நாட்டில் வெந்தயத்தை ஒரு காலத்திலும் சமையலுக்குப் பயன்படுத்தவில்லை. ரோமானியர்கள் வெந்தயத்தை எடுத்துச்சென்று முதன்முதலில் சமையல் பொருளாகப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மூலமாகத்தான் இது மத்திய கிழக்கு, இந்தியா ஆகிய பகுதிகளுக்குப் பரவியது.
செரிமானம் சீரடைதல், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், தாய்ப்பால் அதிகரித்தல், இருமல், மூச்சுத்திணறல் குறைதல் என பலவகையான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். மஞ்சளுக்குப் பின் அதிக நன்மைகள் கொண்டது. இந்தியா முழுவதும் உள்ள உணவு வகைகளில் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தின் கசப்பை நீக்க, இராஜஸ்தானியர்கள் ஒரு வழி வைத்திருக்கிறார்கள். அதை அடுத்த வாரம் பார்ப்போம்
- காபி
