தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/மலர்களே மலர்களே - 16 பூவில் ஆடும் வண்டு

மலர்களே மலர்களே - 16 பூவில் ஆடும் வண்டு

மலர்களே மலர்களே - 16 பூவில் ஆடும் வண்டு


PUBLISHED ON : செப் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓர் ஆடு, புலி, புல்லுக்கட்டு என்ற கதைப் புதிரை நாம் கேள்விப்பட்டிருப்போம். மூன்றுக்கும் சேதாரம் இல்லாமல் பத்திரமாய் அடுத்த கரையில் எப்படிக் கொண்டு போவது? விளையாட்டாக நாம் போடும் புதிர். இப்படித்தான் இருபால் மலர்களும் இக்கட்டான புதிரில் சிக்கிக்கொள்கிறது.

இருபால் மலர்களில் எல்லா பூக்களிலும் பெண்ணக உறுப்பான சூல்தண்டு எனும் தம்பம், ஆணக உறுப்பான பூவிந்தகம் எனும் மகரந்தக்கோசம் இருக்கும். அயல் மகரந்தச் சேர்க்கையை விரும்பும் தாவரங்கள் தனது மகரந்தத்தை வைத்தே தனது சூல்பையை கருவுறச் செய்யக்கூடாது. வேறு தாவரத்தின் மலர்களிலிருந்து மகரந்தத்தை எடுத்துவந்து தனது சூல்முடியை அடையச் செய்ய வேண்டும். அயல் மகரந்தச் சேர்க்கையில் தேனீ, வண்டு, சுரும்பு, தும்பி, ஈ, குழவி, விட்டில் பூச்சி, அந்துப்பூச்சி என, பல்வேறு வகைப் பூச்சிகள் பூந்துகள் சேர்ப்பியாகச் செயல்படுகின்றன.

வண்டு வந்து பூவில் அமரும்போது, பூவிதழ், சூல்தண்டு என பூவின் எல்லாப் பகுதியும் அசையும். அப்படி பூ அசையும்போது, அதன் மகரந்தமே அதன் சூல்முடியில் ஒட்டி தன்கருவூட்டல் நடைபெறும் ஆபத்தும் உள்ளது. இதனைச் சமாளிக்கத் தாவரங்கள், தமது பூவின் வடிவங்களை பல்வேறு யுக்தியில் வடிவமைக்கின்றன.

'ஃபிளாக்ஸ்சீட்' (Flaxseed அல்லது Linseed) எனக் கூறப்படும் ஆளிக்கொட்டை (ஆளி விதை) தரும் ஆளி தாவர பூவில் இரண்டு வகை இருக்கும். ஒன்றில் சூல்தண்டு குட்டியாக பூவின் கீழே அமைந்து இருக்க மகரந்தக் கம்பி தலைதூக்கி இருக்கும். மற்றதில் மகரந்தக் கம்பி குட்டியாக கீழே இருக்க, சூல்தண்டு பெரிதாக வெளியே நீட்டியபடி இருக்கும்.

இரண்டு வகைப் பூவிலும் அதனை அண்டும் பூச்சி கொண்டுவரும் மகரந்தம்தான் அதன் சூல்முடியில் படும். இரண்டும் இரு உயரத்தில் இருப்பதால் தனது மகரந்தமே அதன் சூல் முடியில் படும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்து தன்கருவூட்டல் தடுக்கப்படும். இதே போல சூலகத் தண்டு மகரந்தக் கம்பி உயரங்கள் வேறுபட்டு அமையும் இருமட்டச் சூல்தண்டு அமைப்பு (Heterostyly) ப்ரிம்ரோஸ், கத்திரி முதலிய தாவரங்களிலும் உண்டு.

இதே இலக்கை அடைய தக்காளி குடும்பத்தை சார்ந்த 'பப்பாலோபர்' எனும் 'சொலனம் ரோஸ்டரடம்' (Solanum Rostratum) எனும் தாவரம், இரண்டு வகைப் பூக்களைத் தயாரிக்கிறது. ஒன்றில் ஆணக மகரந்தக் கம்பி இடதுபுறம் சாய்ந்து வளைந்து இருந்தால் மற்ற பூவில் வலது புறம் சாய்ந்து இருக்கும்.

ஒவ்வொரு பூவிலும் ஆணக மகரந்தக் கம்பிக்கு எதிர்திசையில் பெண்ணக சூல்தண்டு வளைந்து இருக்கும். இவ்வாறு ஆடி எதிர்உருவ (Mirror Image) அமைப்பைப் பெற்றுள்ளது.

பூவில் அமரும் வண்டின் இடதுபுறம் மகரந்தப் பை உடைய கம்பி. வலதுபுறம் சூல்முடியைத் தாங்கிய சூல்தண்டு. எனவே வண்டின் இடதுபுறம் மட்டுமே மகரந்தம் படியும். எனவே, தன்கருவூட்டல் நடைபெறுவது தடையாகிறது.

அது மட்டுமல்ல; பல தாவரங்கள் மலர்களிடையே கலப்பு நடந்து மேலும் வீரியமான மரபணு பரவல் கொண்ட விதைகள் உருவாக எதிருரு மலரமைப்பு (Enantiostyly) வழிவகுக்கிறது. இந்த வடிவம் பத்துக்கும் மேற்பட்ட பூக்கும் தாவர குடும்பத்தில் காணக் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us