சரித்திர சங்கமம்: மண்ணைக் கவ்விய மன்னர்களின் கூட்டணி
சரித்திர சங்கமம்: மண்ணைக் கவ்விய மன்னர்களின் கூட்டணி
PUBLISHED ON : மார் 30, 2026

தந்தையின் இறப்புக்குப் பிறகு பாண்டிய நாட்டிற்கு அரசனானான் அந்த மன்னன். சிறுவனாக நேற்று வரைக்கும் கிண்கிணி அணிந்திருந்த கால்கள் அவனுடையவை. இன்று போர் முரசு கொட்டவே, வீரக்கழலைத் தன் காலில் அணிந்துகொண்டான். தலையில் வேப்பந்தளிரையும் சூடிக்கொண்டான்.
யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகிய ஏழுபேர் கூட்டணி அமைத்து பெரும்படையோடு, பாண்டிய நாட்டை முற்றுகையிட்டனர். 'அவர்களை வீழ்த்த வேண்டும். வாகைச் சூடி, நாட்டைக் காப்பாற்ற வேண்டும்' என்ற எண்ணம் மட்டுமே, அந்த இளவயது பாண்டியன் மனத்தில் பெரும் நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது.
பாண்டிய நாட்டு மக்கள், கலக்கத்தில் இருந்தனர். வந்திருப்பதோ ஏழு அரசர்களின் கூட்டணிப்படை. தங்கள் அரசனோ இளையவன். என்னாகுமோ நாடு என்று கவலை கொண்டனர்.
''அந்த ஏழு பேரையும் நான் போரில் வீழ்த்தாவிட்டால், என் நாட்டு மக்களே என்னைத் தூற்றட்டும். கேட்பவருக்கு எதுவும் கொடுக்க முடியாத வறுமை வந்து என்னைச் சூழட்டும். மாங்குடி மருதனாரை தலைவராகக் கொண்ட புலவர் கூட்டம் என்னை வெறுத்து ஒதுக்கட்டும்'' என, வீர சபதம் செய்தான் பாண்டிய அரசன்.
போர், தலையாலங்கானம் என்னும் இடத்தில் நடந்தது. அவன் சிறிதும் கலங்கவில்லை. எலியைக் கூண்டிலே சிக்க வைப்பது போல், எழுவரையும் சிக்க வைத்தான். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தான்.
பெரும்படை மட்டுமே வெற்றியைத் தீர்மானித்துவிடாது, போரில் தான் எப்படிப் பங்காற்றப் போகிறோம், திட்டம் வகுக்கிறோம் என்பதே முக்கியம். அதுதான் வெற்றியைக்கொடுக்கும் என்பதை உலகிற்குப் புரிய வைத்த, இந்த இளைய பாண்டிய மன்னன் யார்?
விடை: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்.
