PUBLISHED ON : டிச 09, 2019

சாதனை : பேருந்து நிலையம்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணாயிரம், 2011--_ 2016 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் சிறந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கான விருது பெற்றவர். அவரிடம் பேசினோம்:
“ஊர்ப் பஞ்சாயத்து தலைவர் ஆவதற்கு முன்பே இவ்வூர் பள்ளிக்கூடத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் மூன்று வகுப்பறைகளும், மாணவர்கள் அமர்வதற்கு மேஜை நாற்காலியும் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.
இதனால் சுயேச்சையாக நின்ற என்னை, ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
பஞ்சாயத்து நிதியில் இருந்து ஊருக்கு சரியான சாலைவசதியும், குடிநீருக்காக நான்கு டேங்குகளும் கட்டிக்கொடுத்தேன். பயன்படாமல் இருந்த 1 ஏக்கர் புறம்போக்கு நிலத்தைச் சீர்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியைப் பெற்று, எங்க ஊருக்காகப் பேருந்து நிலையம் கட்டிக்கொடுத்தேன். பேருந்து நிலையத்தை ஒட்டி பத்து கடைகள் கட்டிக்கொடுத்திருக்கிறேன். அந்தக் கடையில் இருந்து வரும் வருவாய் எங்கள் கிராம வளர்ச்சிக்குச் செலவிடப்படுகிறது.
ஒன்றரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தனியார் வசம் இருந்தது. அது அரசுக்குச் சொந்தமாக நான் கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அந்த இடத்தில் இப்போது வட்டாட்சியர் அலுவலகம் இயங்குகிறது.
ஊரில் பின்தங்கிய மக்களுக்கு 45 வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கிறேன்.” இதற்காக விருது கொடுத்தார்கள் என்கிறார் கண்ணாயிரம்.
