பள்ளிகளில் கல்வி வளர்க்கப்படுகிறதா? ஊட்டப்படுகிறதா?
பள்ளிகளில் கல்வி வளர்க்கப்படுகிறதா? ஊட்டப்படுகிறதா?
PUBLISHED ON : அக் 23, 2017

மாணவர்களின் நலனுக்காகவே பள்ளிகள் பல்வேறு கற்பித்தல் உத்திகளைப் பின்பற்றுகின்றன. இதிலும் பல விமர்சனங்கள் உண்டு. இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி வளர்க்கப்படுகிறதா அல்லது ஊட்டப்படுகிறதா? சென்னை, ஆவடி, வேல்ஸ்டெக் எஸ்டேட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் இதைப் பற்றி உரையாடினார்கள்.
வெ.பூஜா, 10ம் வகுப்பு
கல்வி ஊட்டப்படுகிறது அப்படிங்கறதை யாரா இருந்தாலும் ஏற்க முடியாது. கல்வியின் வளர்ச்சி எதில் இருக்கு? நாம டீச்சருங்க சொல்றதைப் படிக்கணும். அதுதான் நம்மோட வளர்ச்சிக்கு அடிப்படை. நாம நல்லா படிச்சு மார்க் எடுக்கணும். அதுக்கு பாடங்களைச் சொல்லித் தந்து, நமக்குப் புரியவைக்கறதுதான் சரியான முறையே தவிர ஊட்டுவது அல்ல.
மா.மனோவா தேவகுமார், 11ம் வகுப்பு
நம்மோட கல்வித் திட்டம் மாணவர்கள் எடுக்கிற மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தர்றதா இருக்கு. மாணவர்களை புத்தகப் புழுக்களாக ஆக்கி, மனப்பாடம் பண்ணி அதைத் தேர்வுத்தாளில் எழுதித் தர்றதாவே இருக்கு. புத்தகத்தில் இருக்கறதைப் படிச்சு அதை அப்படியே தேர்வுத் தாளில் எழுதற நடைமுறைதான் இருக்கு. இது கல்வியை வளர்க்கறது இல்ல, கல்வியை ஊட்டறது. கட்டாயமா படிச்சு பாஸ் பண்ணனும்னு வற்புறுத்தும் விதமா இருக்கு. இது கல்வியை வளர்க்கறது இல்ல, ஊட்டறதுதான்.
வே.ஷர்மிளா, 11ம் வகுப்பு
கல்வி வளர்க்கப்படுகிறது. ஆசிரியர்களின் ஒரே நோக்கம் மாணவர்கள் நல்லா படிச்சு பாசாகணும். நிறைய மார்க் எடுக்கணும். இது ஏன்? ஆசிரியர்களுக்கு இதனால் என்ன நன்மை? அதிக ரிசல்ட் காட்டணும்னு எல்லோரும் சொல்லலாம். ஆனா உண்மை என்னன்னா ஆசிரியர்கள் செயற்படுவது மாணவர்கள் நலனுக்காகத்தானே? அதன் மூலமாக நன்மை பெறப்போவது மாணவர்களாகிய நாங்கள்தான். எனவே, கல்வி ஊட்டப்படுவது என்பது சரியல்ல, வளர்க்கப்படுகிறது என்பதே உண்மை.
ர.கோகுல், 12ம் வகுப்பு
முழு மார்க்கும் வேணும்னா எல்லாத்தையும் படி, பாசாகணும்னா முக்கியமான கேள்வி பதிலை மட்டும் படி - இதுதான் ஆசிரியர்கள் கொடுக்கிற வழிகாட்டுதல். இதன்படி பார்த்தா நாம படிக்கறது என்னன்னு தெரியும். படிப்பு கற்பிக்கப்படுதா, ஊட்டப்படுதா என்கிற கேள்விக்கு இதில் பதில் இருக்கு. தேர்வு அடிப்படையிலான கல்வி முறைதான் இங்க இருக்கு. நீ என்ன படிச்ச, என்ன புரிஞ்சுது அதைப்பற்றிய கவலை இல்ல. எனவே, கல்வி வளர்க்கப்படலை, ஊட்டப்படுது, மாணவர்களுக்கு திணிக்கப்படுது.
ரா.ஜனனி, 10ம் வகுப்பு
பள்ளிகளில் கல்வி ஊட்டப்படுகிறது என்பது தவறு. மாணவர்களாகிய எங்களோட நலனுக்காகத்தான் ஆசிரியர்கள் கல்வியை கற்பிக்கிறாங்க. அதுக்காக ரொம்பவும் முயற்சி எடுக்கறாங்க. எல்லா மாணவர்களும் தங்களோட பொறுப்பையும் கல்வி மீதான அக்கறையையும் எடுத்துக்கணும். எதுக்கு அவங்க படிக்க வற்புறுத்தறாங்க. அடுத்தடுத்த உயர் கல்வியில நாம நல்லா படிக்கணும். அப்பதான் நம்ம எதிர்காலம் நல்லா இருக்கும். அது கல்வியை ஊட்டறதில்ல, நம்மோட கல்வி வளர்ச்சி அதுலதான் இருக்கு.
ர.பரத்குமார், 12ம் வகுப்பு
கல்வியால மட்டும்தான் சாதிக்க முடியும்னு டீச்சருங்க நினைக்கறாங்க. எத்தனையோ மாணவர்கள் விளையாட்டு போன்ற பிற துறைகள்ல சாதனை புரியறவங்களா இருக்காங்க. ஆனா டீச்சருங்க என்ன சொல்றாங்கன்னா நீ படிக்கறதை விட்டுட்டு மத்த விஷயத்துல கான்சன்ட்ரேட் பண்றன்னு சொல்றாங்க. எல்லா பசங்களும் படிப்புல மட்டுமே கவனம் செலுத்தறதில்ல, அவங்க விருப்பம் சார்ந்து பிற துறையில சிறந்தும் இருக்கலாம். அப்படியான மாணவர்களைப் பொறுத்தவரை அவங்களுக்கு கல்வி வளர்க்கப்படலை, ஊட்டப்படுது. இதுதான் உண்மை.
