sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/மருத்துவமும், பொறியியலும்தான் உங்கள் முதல் தேர்வா அல்லது வேறு துறைகளா?

மருத்துவமும், பொறியியலும்தான் உங்கள் முதல் தேர்வா அல்லது வேறு துறைகளா?

மருத்துவமும், பொறியியலும்தான் உங்கள் முதல் தேர்வா அல்லது வேறு துறைகளா?


PUBLISHED ON : ஜூன் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளிப் படிப்பை முடித்து, உயர்கல்விக்குச் சேர விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வு பெரும்பாலும், மருத்துவம், பொறியியல் சார்ந்த துறைகளாகவே உள்ளன. உயர்கல்வியில் வேறு துறைகளில் படிக்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. 'மருத்துவமும் பொறியியலும்தான் உங்கள் முதல் தேர்வா அல்லது வேறு துறைகளா?' என்ற தலைப்பில் மாணவர்களின் கருத்துகளை அறிய 'நீங்களும் பங்கேற்கலாம்' என்ற தலைப்பில் கருத்துகளை எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தோம். தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள், கருத்துகளை அனுப்பியிருந்தார்கள். மாணவர்களின் விருப்பமும், தேர்வும் என்ன என்பதைப் பற்றி இந்தக் கருத்துகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சு.அஜய் பிரகாஷ்: கணக்குத் தணிக்கையாளர் கல்வியே எனது விருப்பம்

நம் கைகளில் கிடைத்திருக்கும் ஓர் அற்புதமான ஆயுதம் கல்வி. மனித சமுதாயம் முழுமைக்கும் அனுபவத்தையும், வேலைவாய்ப்பையும் தருகிற வாழ்வாதாரமாக கல்வி உள்ளது. எனது ஆர்வமும், தேர்வும், கலைக்கல்வி சார்ந்த படிப்பில்தான் உள்ளது. இப்போது பொறியியலில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. நான் தணிக்கையாளராகவே (Auditor) விரும்புகிறேன். கணக்குகளை தணிக்கை செய்யும் பணியில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. கணக்குத் தணிக்கையாளராக நம் வாழ்நாள் முழுக்கப் பணிபுரிய முடியும். வேலைவாய்ப்புகளும் சிறப்பாக உள்ளது. பட்டய கணக்காளர் (Chartered Accountant), பட்டயச் செயலாளர் (Chartered Secretary), செலவு மற்றும் கணக்குத் தணிக்கையாளர் (Cost and Works Accountant) போன்ற பல பணிகள், கணக்குத் தணிக்கை சார்ந்து உள்ளன. கடின உழைப்புடனும் தீவிர முயற்சியுடனும் இந்தக் கல்வியைப் பயின்றால், உடனடி வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. இந்தக் கல்விகளைப் படிப்பதற்கான செலவும் மிகக் குறைவு. மூளையை மட்டுமே மூலதனமாகச் செலவிடக்கூடிய இந்தக் கல்விகளைத் தேர்ந்தெடுத்துப் படித்தால், வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர முடியும். தணிக்கைப் பணியில் நேர்மையாக ஈடுபடுவதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நாமும் பங்களிக்க முடியும். ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், பதுக்கி வைத்த பணங்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உதவும் வகையில் பணி செய்யலாம்.

மு.விக்னேஷ்: பிற துறைகள் சார்ந்த படிப்பே என் தேர்வு

மருத்துவம், பொறியியல் கல்வி பயில, அதிகப் பொருளாதார வசதி வேண்டும். எல்லா மாணவர்களும் பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளையே தேர்வு செய்தால், மற்ற துறைப் படிப்புகள் தேவையற்றதாகிவிடும். ஆண்டுதோறும் பொறியியல் படிப்பில் நிரப்பப்படாமல் லட்சக்கணக்கான காலி இடங்கள் உள்ளன என்று செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. பொறியியல் படிப்பு முடிந்தவுடன், எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடும் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. பொறியியல் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள், வேலை கிடைக்காமல் வேறு துறை பணிகளைச் செய்து வருகின்றனர். இதர துறை பட்டங்கள், தொழிற்கல்வி போன்றவை படித்தால், ஏதேனும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்துவிட முடியும். பொறியியல் படிப்பு என்பது இன்று கௌரவத்திற்காகப் படிப்பதாகவே உள்ளது. இதனால், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, மருத்துவம், பொறியியலை மட்டுமே முதல் தேர்வாகக் கொள்ளாமல், வேறு துறை சார்ந்த படிப்புகளையும் தேர்வு செய்து அதில் ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். குறைந்த பொருளாதாரச் செலவில் படித்து, உடனடியாக நல்ல வேலை வாய்ப்புகளைத் தரக்கூடிய பிற துறைகளை மாணவர்கள் தேர்வு செய்து, முன்னேற்றம் கண்டு வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்திட வேண்டும்.

பீ.ஜெனிபர்: மருத்துவம் எனது முதல் தேர்வு

'பெரிதினும் பெரிது கேள்' என்பான் பாரதி. நம்முடைய இலக்கு உயர்வாக இருந்து, உழைப்பை இரு மடங்காக மாற்றினால், நம்முடைய நோக்கம் வெற்றிக்கனியைப் பறிப்பது உறுதி. என்னுடைய முதல் (உயர்ந்த) குறிக்கோள் மருத்துவம் சார்ந்த படிப்பு. மருத்துவம் பயின்று மக்களுக்குப் பணியாற்றுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.

இன்றைய சூழலில் மருத்துவம் இன்றி மனிதனால் பயணிக்க முடியாது. மனிதனையும் மருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது. பொறியியல் படிப்பதைவிட மருத்துவம் படிப்பது மகத்தானது.

பொறியியல் படிப்பை யாவரும் பயிலலாம். ஆனால், மருத்துவப்படிப்பை விரும்பியவர்கள் மட்டுமே பயில முடியும். மருத்துவம் படிப்பது கடினம். பொறியியல் படிப்பது எளிது. மனித குலத்துக்கு மருத்துவப் பணி மிகவும் இன்றியமையாதது. மருத்துவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், மருத்துவராக சேவை செய்யலாம். மருத்துவப் படிப்பிற்கு இதைவிட வேறென்ன சிறப்பு வேண்டும். எனவே, உயர்கல்வி பயில்வதில், மருத்துவமே என்னுடைய முதல் தேர்வு.

மு.நித்யகல்யாணி: பொறியியலின் உட்பிரிவுகளில் படிக்க விரும்புகிறேன்

பொறியியல் துறையிலேயே உட்பிரிவுகள் நிறைய உள்ளன. நான் பொறியியல் துறையில் பலர் அதிகம் தேர்ந்தெடுக்காத வாய்மொழித் தொடர்பு (Oral Communication) துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்புகிறேன். எழுதப்பட்ட தகவல்களுக்கு வாய்வழித் தேர்வு செய்வதற்கு பல சூழ்நிலைகள் உள்ளன. வாய்மொழித் தொடர்பில், அதிக நெகிழ்வுத் தன்மையும் உள்ளது. இந்தக் கல்வியின் மூலம் தொடர்பு கொள்வதில் உள்ள சிக்கல்களின் பல்வேறு அம்சங்களை பொறியியலின் கூறுகளோடு நாம் அறிந்துகொள்ளவும், விவாதிக்கவும் முடியும்.

மேலும், நாம் எழுதுவதைவிட விரைவாக முடிவுகளை எடுக்கலாம். நிறுவனம் சார்ந்த பிரச்னைகளை சுமுகமாகத் தீர்ப்பதிலும், விரைவான முடிவு காண்பதிலும் வாய்மொழித் தொடர்பு பொறியியல் உதவுகிறது. ஊழியர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை, இந்தக் கல்வி நமக்குப் பயிற்றுவிக்கிறது. ஒரு குழுவில் ஆற்றல் மற்றும் உற்சாகத்தைப் பராமரிப்பதற்கு, வாய்மொழித் தொடர்புக் கல்வி உதவுகிறது. வாய்மொழித் தொடர்புப் பொறியியல் கல்வியை எடுத்துப் படித்தால், எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன். எனவே, பொறியியல் கல்வி என்பதில் உள்ள தனித்துவமான உட்பிரிவுகளையும் தேர்ந்தெடுத்துப் படிப்பதில் எனக்கு விருப்பமிருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us