PUBLISHED ON : ஆக 14, 2017

சிறுவர்களால், பெரியவர்களைவிட எதையும் வேகமாகக் கற்றுக்கொள்ள முடியும். இதற்கு அவர்களின் மூளை, மிருதுத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருப்பதே காரணம். வயதாக வயதாக, மூளையின் நெகிழ்வுத்தன்மை குறைந்துகொண்டே வரும். அதனால்தான், சிறுவர்கள் அளவுக்குப் பெரியவர்களால், புதிய மொழியையோ, இசையையோ விரைவாகக் கற்க முடியாது.
இந்நிலையில், ஆர்க் மைட் என்ற மரபணு மாற்ற சிகிச்சை மூலம், மூளையின் நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்க முடியும் என்று, அமெரிக்காவின் உட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வயதான எலியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், அதன் மூளையை சிறு எலியின் மூளை போன்று இளமையாக மாற்றி, விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஆய்வை முடித்துள்ளனர். இது மனிதர்கள் விஷயத்திலும் பொருந்துமா என்பது குறித்து, ஆய்வு நடைபெற்று வருகிறது. அப்படி நடந்தால், வயதானவர்களுக்கு வரும் பக்கவாதம் உள்ளிட்ட மூளை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.