PUBLISHED ON : செப் 17, 2018

கவிச்சக்ரவரத்தி கம்பரை ஆதரித்த வள்ளல், திருவெண்ணெய் நல்லூரில் வசித்த சடையப்பர். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, தான் எழுதிய 'இராம காதை'யில் (இராமாயணம்), ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம், சடையப்பரை புகழ்ந்து எழுதியுள்ளார் கம்பர்.
சான்றாக,
'மண்ணவர் வறுமை நோய்க்கு
மருந்தென சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன
படைக்கலம் அருளினானே'
என்ற பாடலில்,
'வறுமை நோயை, திருவெண்ணெய் நல்லூர் சடையப்பரின் ஒரே ஒரு சொல் எப்படி மருந்தைப் போன்று தீர்க்குமோ, அதைப் போன்ற வலிமையுடைய ஆயுதங்களை, அரக்கர்களை அழிப்பதற்காக விசுவாமித்திரர் இராமர், இலக்குவனுக்குக் கொடுத்தார்' என, ஒப்புமைப் படுத்திப் புகழ்கிறார்.
இலங்கையில் கண்டிப் பகுதியை, பரராச சிங்கன் ஆண்டு வந்தார். அங்கு பெரும்பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தைத் தீர்க்க உதவும்படி, பரராச சிங்கன், சடையப்ப வள்ளலைக் கேட்டுக் கொண்டார். அக்கோரிக்கையை ஏற்ற சடையப்பர், ஏராளமான கப்பல்களில் நெல் அனுப்பி, கண்டியின் பஞ்சத்தைத் தீர்த்தார்.
இதனை,
'தேனார் தொடையார் பரராச
சிங்கப் பெருமான் செந்தமிழ்க்குக்
கானார் நெல்லின் மலைகோடி
கண்டி நாடு கரைசேர'
என்று சடையப்பரின் புகழ் பாடுகிறது
'சோழ மண்டல சதகம்'.
பயிற்சிக்கு!
1. கம்பர், தான் எழுதிய இராமாயணத்துக்கு, முதலில் வைத்த பெயர் யாது?
..........................................
2. நூறு பாடல்களைக் கொண்ட, சிற்றிலக்கியத்துக்கு என்ன பெயர்?
..........................................

