PUBLISHED ON : ஜூலை 02, 2018

தமிழ்ப் பாடத்தில் உள்ள மனப்பாடப்பகுதி, பலருக்குப் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. தமிழில் மனப்பாடப்பகுதி தேவையா? என காஞ்சிபுரம், சோழன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். மனப்பாடப்பகுதியின் அவசியம், அது ஏன் தேவை என்பது பற்றி அவர்களது கருத்துகள்…
க.ரித்திகா, 8ஆம் வகுப்பு
மனப்பாடப்பகுதி பாடல்கள், எனக்குப் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. பல புரியாத வார்த்தைகள் இருக்கறதுதான் அதுக்குக் காரணம். ஆனா, கீழேயே வார்த்தைகளுக்கான பொருள் போட்டிருக்கறதால, பொருள் தெரிஞ்சுக்க முடியுது. இந்த ஆண்டு படிக்கும் மனப்பாடப்பகுதி பாடல் அடுத்த ஆண்டு மறந்துடுது. தமிழ்ல மனப்பாடப் பகுதி இல்லன்னா நல்லாயிருக்கும்.
வி.மோத்திஸ்ரீ, 9ஆம் வகுப்பு
செய்யுள், பாடல்கள் படிக்கறது நல்லது. மார்க் வாங்கறதுக்கு மட்டுமில்ல. வாழ்க்கைக் கல்வியை செய்யுள், சங்கப் பாடல்கள் மூலமா தெரிஞ்சுக்க முடியுது. மொழி வளத்தை உருவாக்கறதுல இது முக்கியப் பங்கு வகிக்குது. பாடல்களைப் புரிஞ்சுக்கிட்டு படிச்சா மனப்பாடப்பகுதி பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஆர்வத்தோட படிச்சா சுலபம்தான்.
ரா.ராஜஸ்ரீ, 9ஆம் வகுப்பு
திருக்குறள், நன்னூல், ஆத்திசூடி இதெல்லாம் படிக்கறப்ப, பல நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியுது. மனப்பாடப் பகுதியை வாய்விட்டு சத்தமாப் படிச்சு மனசுல பதிய வெச்சுக்குவேன். குறிப்பா, திருக்குறளை எல்லோரும் படிச்சு மனப்பாடம் பண்றது வாழ்க்கைக்கு ரொம்ப உதவியா இருக்கும். மனப்பாடப் பகுதி கண்டிப்பா தேவை. மனப்பாடப் பகுதியில இல்லாத செய்யுள்களையும் படிச்சுப் பார்ப்பேன்.
த.ஜெயனேஷ், 9ஆம் வகுப்பு
மனப்பாடப் பகுதியை நான் கவனத்தோட நல்லாப் படிச்சுக்குவேன். பல புதிய தமிழ்ச் சொற்களைப் படிச்சு அதுக்கு அர்த்தம் தெரிஞ்சுக்குவேன். மனப்பாடப்பகுதி பாடல்கள் பிடிக்கும்னு இல்ல. அதை அப்படியே சரியா எழுதினா, முழு மதிப்பெண் வாங்கலாம். தமிழ்ல நூத்துக்கு நூறு வாங்கணும்னா மனப்பாடப்பகுதியை கட்டாயம் படிக்கணும். தொடர்ந்து படிச்சா மனப்பாடப் பகுதி எளிதுதான்.
ர.ஸ்ரீநிவாஸ், 9ஆம் வகுப்பு
படிக்கறதுக்கு கஷ்டமா இருந்தாலும், மனப்பாடப்பகுதி வேணும்தான். நம்மோட ஞாபகசக்தியை வளர்த்துக்க இது உதவுது. முன்னே எல்லாம் மொழி எப்படிப் பயன்படுத்தப்பட்டதுன்னு செய்யுள் பகுதியைப் படிக்கறப்ப தெரிஞ்சுக்க முடியுது. பல புதிய தமிழ் வார்த்தைகளை தெரிஞ்சுக்க முடியுது. தமிழ் மொழி எப்படியெல்லாம் மாற்றங்களைக் கடந்து வந்திருக்குன்னும் தெரிஞ்சுக்கலாம்.
உ.முகமது அபுதல்கா, 8ஆம் வகுப்பு
தமிழ் மனப்பாடப்பகுதி நிச்சயமா தேவை. நம்மோட மொழியை, ஓசை நயத்தோடயும் சந்தத்தோடயும் தெரிஞ்சுக்க இது உதவுது. தவிர திருக்குறள், நாலடியார்னு இரண்டு, நான்கு வரிகளில் சுருக்கமா பல நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்காங்க. மனப்பாடப் பகுதி பாடல்களை அர்த்தத்தைப் புரிஞ்சுக்கிட்டுப் படிக்கணும். அதன் உரையோட சேர்த்துப் படிச்சா ரொம்ப நல்லா மனசுல பதியும்.
