PUBLISHED ON : டிச 25, 2017

“இன்றைய ஊடகம் இளைஞர்களை சீரழிக்கிறதா? சீர்படுத்துகிறதா?” சென்னை, புதூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களைக் கேட்டோம். இதோ அவர்களது கருத்துகள்.
ச.ர.அபிலாஷ், 11ஆம் வகுப்பு
ஊடகங்கள் இன்னைக்கு நிறைய வளர்ச்சியைத் தந்திருக்கு. எல்லோரையும் தொடர்புல வெச்சிருக்கிற நன்மையைத் தருது. செய்திகளை உடனுக்குடனே தெரிஞ்சுக்கறதால விபத்து, டிராஃபிக், இயற்கைப் பேரிடர்கள் எல்லாத்துலயிருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைய எடுத்துக்க முடியுது. அதிகத் தகவல்களை அள்ளி வழங்கினாலும், தேவையானத எடுத்துக்கறது நல்லது. அதனால ஊடகங்களால நன்மைதானே தவிர தீமை இல்ல.
உ.பார்த்திபன், 11ஆம் வகுப்பு
தகவல்களைக் கொண்டு சேக்கறதுல ஊடகங்களோட பணி மகத்தானது. தொழில்நுட்ப வளர்ச்சி மூலமா நாம இதை சாதிச்சிருக்கோம். முன்னேயெல்லாம் எங்க மழை, புயல் வீசுதுன்ற தகவல்லாம் மறுநாள் பேப்பர் வந்துதான் தெரிஞ்சுக்க முடியும். தேர்வு, வேலைவாய்ப்பு, வங்கிச் சேவை, அரசுத் திட்டங்கள்னு எல்லா விஷயங்களிலும் தகவல்களைத் தர்றதுல ஊடகங்கள் சிறந்து விளங்குது. எல்லா விஷயத்துலயும் கெட்டது இருக்கத்தான் செய்யும். நாம நல்லதை மட்டும் எடுத்து அதைப் பயன்படுத்திக்கறதுதான் நல்லது.
ஸ்ரீ ஜோதி பூர்ணா, 11ஆம் வகுப்பு
ஊடகங்களால நன்மைகளைவிட தீமைதான் அதிகமா இருக்குன்னு நினைக்கறேன். குறிப்பா சோஷியல் மீடியா இன்றைக்கு எல்லோரையும் அடிமையா ஆக்கி வெச்சிருக்கு. எதாவது பரபரப்பான செய்தி வராதான்னு எதிர்பார்க்கற அளவுக்கு போயிட்டு இருக்கு. ஒரு பிரச்னை வந்தா அதை அடுத்த பிரச்னை வரும்போது மறந்துடறாங்க. எந்த விஷயத்திலயும் தீர்மானமா முடிவெடிக்க முடியாத நிலைக்குத் தள்ளுது. ஆதாரமில்லாத, வதந்தியான செய்திகளை பரப்பற வேலையத்தான் பெரும்பாலும் ஊடகங்கள் செய்யுது.
பொ.காவியா, 11ஆம் வகுப்பு
இன்றைய காலகட்டத்தில பெரும்பாலும் இணையம் வழியாதான் எல்லா தகவலையும் தெரிஞ்சுக்கறோம். அது நல்லதாவும் இருக்கு, பல சீர்கேடுகளையும் தருது. மாணவர்கள் ஸ்மார்ட் போன் இல்லாம இருக்கறதில்ல. செய்தி, மியூசிக், வீடியோன்னு கவனச் சிதறலைத்தான் இது ஏற்படுத்துது. செய்திகளை தெரிஞ்சுக்கறது அவசியம்தான். நொடிக்கு நொடி செய்திகள் வந்துட்டே இருக்கு. அதுல 90 சதவீதம் முக்கியமில்லாத செய்திகள்தான். அதைப் படிக்கறதால என்ன பயன்னு நாம யோசிக்கறதேயில்ல. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் எல்லாமே நம்ம நேரத்தை வீணாக்குது.
மா. ஆர்த்தி, 11ஆம் வகுப்பு
ஊடகங்களால ஏற்படற பெரிய கேடுன்னு நான் எதை நினைக்கறேன்னா, நாம குடும்பத்தோட நேரம் செலவிடறதே இல்ல. அப்பா, அம்மா, பிள்ளைகள்னு ஒவ்வொருத்தரும் 'டிவி'யிலயுமே எப்பவும் இருக்கறோம். மனிதநேயமே இன்னைக்கு இல்லாம போனதுக்குக் காரணம் ஊடகங்களோட பெருவளர்ச்சிதான். அளவுக்கு அதிகமானா எதுவுமே கெடுதல்தான். மக்களை சொந்தமா எதையும் யோசிக்க விடாம செஞ்சிடுது.
கை.கீர்த்தனா, 11ஆம் வகுப்பு
மாதா, பிதா, கூகுள், தெய்வம்! இப்படித்தான் இன்றைய காலகட்டம் இருக்கு. ஆக்கப்பூர்வமான வழியில பயன்படுத்த வேண்டிய நேரத்தை, ஊடகங்களில் செலவழிச்சுகிட்டிருக்கோம். நன்மைகள் நிறைய இருக்கத்தான் செய்யுது. ஆனா, நன்மைகளைவிட தீமைகளைதான் நாம அதிகம் விரும்பிகிட்டிருக்கோம். ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய விதத்தில் சரியா கையாண்டா அதனோட பயன்களை நாம பெறலாம். ஊடகங்களால அதிகம் ஏற்படறது தீமைகள்தான்.
