
கைச்சிறகி குடும்பத்தைச் சேர்ந்தவை வெளவால்கள். இவை உலகம் முழுவதும் பரவியுள்ளன. பாலூட்டிகளிலேயே பறக்கும் ஒரே வகை, வெளவால்கள்தான். உலகம் முழுவதும் சுமார் 960 வகை வெளவால்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 73 வகைகள் காணப்படுகின்றன. வெளவால்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று,பூச்சிகளை உணவாகக் கொள்ளும் வெளவால்கள், இவை, அளவில் சிறியதாக இருக்கும். மற்றொன்று பழங்களை உணவாகக் கொள்ளும் வெளவால்கள், இவை அளவில் பெரியதாக இருக்கும்.
வெளவால்கள் பெரும்பாலும் இரவாடிகள். ஃபிளையிங் ஃப்ரூட் பேட், ஃபிளையிங் ஃபாக்சஸ் (Flying fruit bat, flying foxes) ஆகிய இரண்டு வகை மட்டுமே பகலில் இரை தேடும். சிறு பறவைகள், மீன்கள், பழங்கள், சிறு பூச்சிகள் ஆகியவற்றை உண்ணும். அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை வெளவால் கால்நடைகள், பன்றி, ஆடு, போன்றவை தூங்கும்போது, அதன் கூரிய கால் நகங்களால் தோலை கிழித்து வெளிவரும் இரத்தத்தை குடிக்கும்.இவை மெல்லிய நெகிழும் தன்மையுள்ள தோலைப் பெற்றுள்ளதால், எளிதில் பறக்க முடிகிறது. குறைந்த எடை, நீண்ட விரல்கள் உள்ளதால், இவற்றால் கிளைகளைப் பற்றிக்கொண்டு இருக்க முடிகிறது. மேலும், நீண்ட நேரம் தலைகீழாகத் தொங்குவதும் சாத்தியமாகிறது.
பறவைகள், பூச்சிகளின் அசைவுகள், மெல்லிய ஓலி அலைகளை வைத்து உன்னிப்பாகக் கவனித்து இரையைப் பிடிப்பதில் கில்லாடி. பறவைகளுக்கு இருப்பது போன்ற இறகுகளால் மூடப்பட்ட இறக்கைகள் வெளவால்களுக்கு கிடையாது. மெல்லிய ஒளி ஊடுருவும், சவ்வு போன்ற தோலே, வெளவால்கள் பறக்க உதவுகின்றன. வெளவால்களின் உடலுக்கு இருபக்கமும், பக்கத்திற்கு நான்காக, மெல்லிய எலும்புகள் கைகளாக அமைந்துள்ளன. இந்தக் கைகளிலும், உடலிலும், கால்களிலும் இணைக்கப்பட்டு, மெல்லிய தோல் அமைந்துள்ளது. கைகள் விரிந்து, மூடும்போது பறக்கும் வாய்ப்பு வெளவால்களுக்கு ஏற்படுகின்றன.
வெளவால்கள் மூலம் பரவும் நோய்கள்:
1922ஆம் ஆண்டு லார்டு கார்னர்யன் (Lord Corneruon) என்ற அகழ்வாராய்ச்சி நிபுணரும், மற்ற ஆய்வாளர்களும் இணைந்து எகிப்திலுள்ள கல்லறையில் வாழும் வெளவால்கள் பற்றி ஆய்வுகள் நடத்தினர். ஆய்வு முடிந்து சில மாதங்களில் ஆய்வாளர்கள், 'ஹீஸ்டோ பிளாஸ்மாஸ்' (Histo Plasmous) என்ற நோயால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் வெளவால்களின் மூலம் ஆய்வாளர்களைத் தாக்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், வெளவால்கள் மூலம் நோய் ஏற்பட வாய்ப்புண்டு என்ற விஷயம் முதன்முதலில் உலகிற்குத் தெரிய வந்தது.
- ஏ.சண்முகானந்தம்

