PUBLISHED ON : ஜூலை 25, 2016

'மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெட'
தமிழ் இலக்கியம் படிக்கும் தன் அக்கா எழில், பாடல் ஒன்றை மனப்பாடம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான் கவின்.
''என்ன பாட்டுக்கா அது? அதுக்கு என்ன அர்த்தம்?'' என்றான் பத்தாம் வகுப்பு படிக்கும் கவின்.
தன் தம்பி அக்கறையாக, பாடலுக்கான பொருள் கேட்பது, எழிலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
''சங்கப் பாடல்ல நற்றிணையில் வருது கவின்! கணியன் பூங்குன்றனார் எழுதியது. மரத்தைப் பத்திச் சொல்லியிருக்கார்.''
''யாதும் ஊரே யாவரும் கேளிர்னு எழுதினாரே அந்தப் பூங்குன்றனார்தானே!''
''அவரேதான்.''
''சரி என்ன சொல்லியிருக்கார் பாட்டுல?''
''நம் முன்னோர் மருந்துக்காக மரத்தின் இலை, பூ, காய்களை சிறிதளவு பறித்துக்கொள்வார்கள். அதற்காக மரத்தையே வெட்ட மாட்டார்கள். அது மாதிரிதான் தவம் செய்பவர்கள் உயர் நிலையை அடைய தவம் செய்வார்கள். அதுக்காக உயிர் போகும் அளவிற்கு தங்களை வருத்திக்கொள்ள மாட்டார்கள்.'' இதுதான் அந்தப் பாட்டுக்கான பொருள் என்றாள். தொடர்ந்து, ''ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியே மரத்தைப் பற்றிய அருமை நம் முன்னோருக்குத் தெரிஞ்சிருக்கு. இப்போ இருக்கிறவங்களுக்குத்தான் அது பற்றிய அருமை தெரியலை கவின்'' என்றாள் .
''என்னோட பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் கூட வள்ளலார், 'வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்காதேன்னு' சொன்னதா இருக்குக்கா!'' என்றான் கவின்.
''அட! அப்படியா? என்றவள், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'னு பயிர் வாடுவதற்காக மனம் வாடியவர் வள்ளலார். அவர், மரத்தை அழிக்கக் கூடாது என்று சொன்னதில் வியப்பெதுவும் இல்லை....'' என்ற எழில், ''இயற்கையை நம் முன்னோர் வணங்கினாங்க. பாதுகாத்தாங்க. அதனாலதான் கோயில்கள்ல தல மரம் வளர்த்தாங்க. அரசர்களும் குலமரமாகவும், வெற்றிக்கான சின்னமாகவும் சில மரங்களை வளர்த்தாங்க...''
''நான் உன்னை என்னவோன்னு நினைச்சேன்க்கா! பரவாயில்லை. உனக்கு மரம் பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு'' என்று தன் அக்காவைப் பாராட்டினான் கவின்.
