தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உருவத்தால் வராது சிறுமை

உருவத்தால் வராது சிறுமை

உருவத்தால் வராது சிறுமை


PUBLISHED ON : பிப் 12, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனை மரம் பனை விதையிலிருந்து முளைத்து வளர்வது. ஆலமரம் ஆலம் விதையிலிருந்து முளைத்து வளர்வது. இரண்டுமே மரங்கள்தாம். இரண்டின் தோற்றுவாயும் விதைகள்தாம். ஆனால், இரண்டு விதைகளும் ஒன்றுபோல் இருக்கின்றனவா? இரண்டு மரங்களும் ஒன்றுபோல் இருக்கின்றனவா?

பனை மரம் கிளைகளில்லாமல் ஓங்கி உயர்ந்து வளர்கிறது. பனம்பழம் தேன்போல் சுவை பயப்பது. ஆனால், ஆலமரம் ஆயிரமாயிரம் கிளைகளைப் பரப்பி வளர்கிறது. விழுதுகள் மண்ணைத் துளைக்கின்றன. ஆலம் பழங்கள் மிகச் சிறியவை. இரண்டு மரங்களின் தோற்றுவாயும் இரண்டு மரங்களின் பயன்பாடும் முற்றிலும் வேறானவை.

பெருவிதையிலிருந்து முளைக்கும் பனைமரத்தின் பயனும், சிறு விதையிலிருந்து முளைக்கும் ஆலமரத்தின் பயனும் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இதைத்தான் நறுந்தொகையில் (வெற்றி வேற்கை) அதிவீரராம பாண்டியர்,

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க் கிருக்க நிழலா காதே.

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணியதே யாயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவியாட் பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலாகும்மே.

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

எனப்பாடியுள்ளார்.

அதாவது, தேன்போல் சுவை தரும் திரண்ட பழத்தின் பெரிய விதையிலிருந்து தோன்றும் பனை மரம் மிக உயரமாக வளர்ந்திருந்தாலும், ஒருவர் நிற்பதற்குக் கூட நிழல் தருவதில்லை.

ஆலமரத்துச் சிறுபழத்தின் ஒரு விதை, தெளிந்த குளத்தில் வாழும் சிறிய மீன் இட்டு வைக்கும் முட்டையை விடச் சிறிதாக இருக்கிறது.

அதிலிருந்து முளைக்கும் மரமானது, பேருருவம் கொண்ட யானை, ஏராளமான தேர்கள், குதிரை, காலாட்படைகளோடு மாமன்னர் நிற்பதற்கும் நிழல் வழங்கும். அதனால் உருவத்தால் பெரியவர்கள் அனைவரும் பெரியவர்களும் ஆகமாட்டார்கள். உருவத்தால் சிறியவர்கள் அனைவரும் சிறியவர்களும் ஆகமாட்டார்கள். பயன் வழங்குவதைப் பொறுத்து, அவர்களுடைய பெருமை விளங்கும்.

-தமிழ்மலை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us