PUBLISHED ON : ஏப் 04, 2016
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் என்றதும் உங்களுக்கு எது நினைவுக்கு வருகிறது? தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஊரின் கோயில் கோபுரம்.
இன்னும் சிலர், 'பால்கோவா' என்பீர்கள். தமிழ் மொழியை மிக விரும்பிப் படிப்பவர்களுக்கு 'திருப்பாவை' பாடிய ஆண்டாளின் நினைவு வரும். ஆண்டாளோடு, அணில் வகைக்கும் பெயர் பெற்றதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர்.
கொஞ்சம் முரட்டு அளவில் மிரட்டும் தோற்றம். தொலைவில் இருந்து பார்க்கும்போது பூனைதான் உட்கார்ந்திருக்கிறதோ என சந்தேகம் வருகிறதா? அது சாம்பல் அணிலாகவும் இருக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் உயிரினம் இது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, 'செண்பகத் தோப்பு' சரணாலயம். இங்கு யானை, சிறுத்தை, வரையாடு என பல விலங்குகள் இருக்கின்றன. இருப்பினும் நரை அணில் என அழைக்கப்படும் சாம்பல் நிற அணில்தான் இந்தச் சரணாலயத்தின் சிறப்பு. இந்த அணில் 1.50 கிலோவுக்கும் அதிகமான எடைவரை இருக்கும். நீளம் முக்கால் மீட்டருக்கும் அதிகம். ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே போடும். (அணிலின் குட்டியை 'அணிற்பிள்ளை' என்பார்கள்.)
புலிகளைப் போல தனக்கென எல்லை வகுத்துக்கொண்டு அந்த எல்லைக்குள்ளாகவே சுற்றிக்கொண்டு வாழும். ஒரே நேரத்தில் இரண்டு கூடுகள் கட்டிக்கொண்டு வாழும் குணமும் இதற்கு உண்டு.
