PUBLISHED ON : நவ 18, 2019

இந்தியாவில் அடுத்து வரும் வாரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களை அறிவோம் வாங்க!
மட்பாண்டச்சந்தை: - நவ. 21 -- 24
மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள கௌகார் மகாலில், மட்பாண்டச்சந்தை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இச்சந்தையில் அழகான வடிவங்களில் பீங்கான், மட்பாண்டப் பொருட்கள் விற்கப்படும். ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் விழாவில், மட்பாண்டத் தயாரிப்பு பயிற்சியையும் வழங்குகிறார்கள். தனியார் விடுதி நடத்தும் நிகழ்ச்சி இது.
பால் பக்கீர் மேளா: - நவ. 22 -- 24
மேற்கு வங்கத்தின் பர்தாமனிலுள்ள தபெந்தர் என்னுமிடத்தில் நடைபெறும் இசை விழா. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியால், நாட்டுப்புறப் பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியாக 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், செக், இஸ்ரேல் நாட்டு இசைக்குழுக்கள் பங்கேற்கின்றன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்நிகழ்ச்சியை ரசிக்கவென்றே வருகிறார்கள். மாநிலத்திலுள்ள 250க்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடுகிறார்கள்.
மகிந்திரா கபீரா விழா: நவ. 22 - 24
பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் கபீரின் புகழ்போற்றும் விழா. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் விழாவின் நோக்கம், வேற்றுமையில் ஒற்றுமை. காலையும், மாலையும் இசைக் கச்சேரி, வரலாற்றை அறியும் நடைப்பயணம், இலக்கிய விவாதம் என, பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மட்சியா திருவிழா: நவ. 25 - 26
மகாபாரதத்தில் வரும் மட்சியா தேசம் காரணமாக இந்த விழாவிற்கு இப்பெயர். இராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் நகரில் இந்த விழா நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் நாட்டுப்புறப் பாடல்கள், இசை, விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சிகள் ஆகியவை இடம்பெறும்.
