PUBLISHED ON : அக் 20, 2016

ஒரு பையன் குடுகுடுவென்று ஓடிவருகிறான். அவனுடைய தலை நன்றாகக் கலைந்து போயிருக்கிறது.
இதைப்பார்த்த அவனுடைய தாய் கோபிக்கிறார், 'டேய், தலைக்கு எண்ணெய் வெச்சியா, இல்லியா?'
உடனே, அந்தப்பையனுக்கு ஒரு சந்தேகம், 'அம்மா, அது எண்ணெயா, எண்ணையா?'
'ரெண்டும் ஒண்ணுதானே?' என்கிறார் தாய்.
'இல்லைம்மா, சொல்லும்போது, கேட்கும்போது ஒரேமாதிரிதான் இருக்கு. ஆனா எழுதும்போது, எண்ணெய் வேற, எண்ணை வேற, எது சரி?'
தமிழில் பகுபதம், பகாப்பதம் என்று இரண்டு விஷயங்கள் உண்டு. பகுக்கமுடிகிறவை, அதாவது, பிரிக்கமுடிகிற சொற்களைப் 'பகுபதம்' என்பார்கள், பிரிக்கமுடியாதவற்றைப் 'பகாப்பதம்' என்பார்கள். (பிரிக்க முடியாத சொற்களுக்கு உதாரணம் பூ, கால்)
அந்தவிதத்தில், 'எண்ணெய்' என்பது பகுபதம். இதனை எள் + நெய் என்று பிரிக்கலாம். எள்ளிலிருந்து எடுத்த நெய், ஆகவே, அது எண்ணெய்.
தேங்காயிலிருந்து நெய் எடுத்தால், அது தேங்காய் நெய், கடலையிலிருந்து நெய் எடுத்தால், அது கடலை நெய். இப்படி குறிப்பிடுவதுதான் சரி.
ஆனால் நாமோ, எல்லாவற்றுக்கும் பொதுவாய் 'எண்ணெய்' என்ற சொல்லைப் பொருத்திவிடுகிறோம். 'தேங்காய் எண்ணெய்' என்கிறோம், அது தேங்காய் + எள் + நெய் என்று பிரிந்து விநோதமான பொருளைத் தரும்.
ஆக, 'எண்ணெய்' என்றாலே எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய், அதாவது நல்லெண்ணெயைத்தான் குறிக்கும். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என்றெல்லாம் எழுதுவது பிழை.
ஆனால், பல காலமாக இப்படிச் சொல்லி நமக்குப் பழகிவிட்டது. இனிமேல் கடைக்குச்சென்று 'தேங்காய் நெய் கொடுங்க' என்று கேட்டால், ஒருமாதிரி பார்ப்பார்கள். எனவே, 'தேங்காய் எண்ணெய்' என்பதை வலுக்கட்டாயமாக மாற்றவேண்டியதில்லை.
சரி, 'எண்ணை' என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
கண் + ஐ = கண்ணை என்று சொல்கிறோமல்லவா? அதுபோல, எண் + ஐ = எண்ணை. இது ஆறு என்ற எண்ணை (Number) குறிக்கும்.
புரிகிறது, இதேபோல், வெண்ணெய், வெண்ணை என இரு சொற்கள் உள்ளனவே, இவற்றில் எது சரி?
வெள் + நெய் = வெண்ணெய், வெள்ளை நிறத்தில் இருக்கும் நெய் அது . அதை, 'வெண்ணை' என்று எழுதக்கூடாது. வெண்ணெய் என்றே எழுத வேண்டும்.
இவைபோக, மண்ணெண்ணெய் கூட உண்டு தெரியுமா? மண் + நெய், மண்ணுக்குள்ளிருந்து கிடைக்கும் எரிபொருளுக்குத்தான் அப்படிப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்!
- என். சொக்கன்

