PUBLISHED ON : ஏப் 08, 2024

அந்தக் காலத்தில் திருவிழாக்கள் தொடங்கி திருமண நிகழ்வுகள் வரை மக்களின் விருப்ப பானமாக இருந்தது நன்னாரி சர்பத். அதிலும் கோடைக்காலம் வந்தவுடன் நினைவுக்கு வருபவற்றில் ஒன்று இது.
நன்னாரி (Indian sarsaparilla), தாவரத்தின் வேர் முதல் இலைகள் வரை அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியவை. இது தெற்காசியாவில் பரவிக் காணப்படும் கொடி இனம். தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ் (Hemidesmus Indicus). அங்காரிமூலி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி போன்றவை நன்னாரியின் வேறு பெயர்கள். இந்தத் தாவரத்தில் பால் இருக்கும் என்பதால் பாற்கொடி என்றும், வாசனையைக் கொடுப்பதால் சுகந்தி என்றும், பூமிக்குள் வளரும் வேர்த்தொகுப்பைக் கொண்டிருப்பதால் பாதாளமூலி என்ற பெயர்களும் இதற்கு உண்டு. நாட்டு நன்னாரி, சீமை நன்னாரி என்ற வகைகள் உள்ளன. இதன் கெட்டியான வேர் நறுமணம் மிக்கது. நீண்டதாக உள்ள பச்சை நிற இலைகள், வெண்ணிறத்தில் வரிகளைக் கொண்டிருக்கின்றன. தண்டுகள் மெல்லியதாக இருக்கின்றன. இந்தக் கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உட்புறம் செம்மை கலந்த ஊதா வண்ணத்திலும் இருக்கின்றன. நன்னாரி சர்பத் என்று கூறப்படும் நன்னாரி சாறு, இந்திய மருத்துவத்தில் பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனந்தமூலா ஆகும்.
இந்த நன்னாரியின் வேர்களை, நன்றாக அலசிச் சுத்தப்படுத்திவிட்டு, மண்பானை நீரில் போட்டு வைத்துக் குடித்து வந்தால், உடலிலுள்ள உஷ்ணம் நீங்கிவிடும்.
அந்த அளவுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியவை இந்த வேர்கள். இது மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.