PUBLISHED ON : ஜன 28, 2019

ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt)
30.1.1882 - 12.4.1945
நியூயார்க், அமெரிக்கா.
இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரிய ஒரே நபர்! இரண்டாம் உலகப் போர், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து அமெரிக்காவை உயர்த்தியவர். 20ஆம் நூற்றாண்டின் சிறந்த அரசியல் தலைவர். ஜார்ஜ் வாஷிங்டன், ஆப்ரகாம் லிங்கன் ஆகியோருடன் சேர்த்து அமெரிக்காவின் மூன்று முக்கிய அதிபர்களுள் ஒருவராகவும் புகழப்படுகிறார் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்.
ஹார்வர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி. அடுத்ததாக கொலம்பியா சட்டப் பள்ளியில் முதுநிலைப் பட்டம் பெற்று, 25 வயதில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அரசியல் அனுபவமற்ற ரூஸ்வெல்டை செனட் சபைக்குப் போட்டியிடுமாறு அழைத்தார்கள். அதனை ஏற்றவர், 1910இல் செனட் சபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1912இல் உட்ரோ வில்சன் அமெரிக்க அதிபரான பிறகு, அவரை ஆதரித்து முழுநேர அரசியலில் ஈடுபட்டார். வில்சன் அமைச்சரவையின் கடற்படையில் உதவிச் செயலாளராக இருந்து, அமெரிக்கக் கடற்படையை நவீனமாக்கினார். இதற்கிடையில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் போராடி பின்பு மீண்டார்.
நான்கு ஆண்டுகள் நியூயார்க் ஆளுநராகச் சிறப்பாகப் பணியாற்றியதால் ஜனநாயக (Democratic) கட்சி 1932இன் அதிபர் வேட்பாளராக ரூஸ்வெல்டை நிறுத்தியது. 50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 32வது அதிபர் ஆனார் ரூஸ்வெல்ட்.
அப்போது அமெரிக்காவில் சுமார் ஒரு கோடிப்பேருக்கும் மேல் வேலையில்லாமல் இருந்தனர். தொழிற்துறை உற்பத்தி கீழே சரிய வறுமை, பசி என மொத்த நாடும் நிலைகுலைந்து தவித்தது. அந்தச் சோதனைக் காலத்தில் இருந்து ஆறே ஆண்டுகளில் அமெரிக்காவை மீட்டெடுத்த மகத்தான வரலாற்று நாயகர் தான் ரூஸ்வெல்ட்!
