PUBLISHED ON : செப் 19, 2016

உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால் நாம் என்ன சொல்வோம்?!
அதுதான் எங்களுக்குத் தெரியுமே என்றுதானே! சரிதான். உலகம் உருண்டை என்பதை முதன் முதலில் சொன்னவர் 'கலிலியோ'. இதை நீங்கள் படித்திருப்பீர்கள்! உலகம் உருண்டை என்பது, 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் முன்பாகவே நம் இலக்கியத்தில் இதைச் சொல்லியிருக்கிறார்கள். என்ன! ஆச்சரியமாக இருக்கிறதுதானே!
உலகம் உருண்டை என்பதை மட்டுமில்லை. முற்கால தமிழ் இலக்கியத்தில் அறிவியல் செய்திகள் நிறைய உள்ளன. மொழி அறிவைச் செழுமையாக்குகிறது. அறிவின் வளர்ச்சியே அறிவியல். இலக்கியங்கள் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியில், இலக்கியத்தில் அறிவியல் செய்திகள் உள்ளனவா என்பதற்கு உதாரணங்களைப் பார்ப்போம்.
உலவு என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். உலவு என்ற சொல்லுக்கு சுற்றுதல் என்று பொருள். உலகம் என்பது இவ்வார்த்தையிலிருந்து உருவானதுதான். 'ஞால்' என்ற வார்த்தைக்கு தொங்குதல் என்று அர்த்தம். இதை 'ஞாலம்' என்ற வார்த்தையோடு தொடர்புபடுத்திப் பாருங்கள். அண்ட வெளியில் உலகம் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறதா!
சங்க கால இலக்கியத்தில் அறிவியல் செய்திகள் நிறைய உள்ளன. அப்படியொரு இலக்கியப் படைப்பைப் பார்ப்போமா?
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
- திருவாசகம்
இந்தத் திருவாசகப் பாடலில் உங்களுக்கு என்ன புரிகிறது? இப்பாடல் வானியலைப் பற்றிச் சொல்கிறது. அண்டம் என்பது நம் பூமி. அது உருண்டையானது என்பதை 'உண்டைப் பிறக்கம்' என்ற சொற்கள் சொல்கின்றன. முற்கால இலக்கியங்களில் அறிவியல் செய்திகள் உள்ளன என்பதற்கு இதுவொரு உதாரணம்.
இதுபோல உங்கள் பாடப் புத்தகத்தில் உள்ள இலக்கியச் செய்யுள்களிலும் அறிவியல் செய்திகள் உள்ளன. அப்படியான செய்திகளை நீங்கள் நண்பர்களோடும், எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
