PUBLISHED ON : டிச 12, 2016

டிசம்பர் 9, 2000 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்
ஊழல் என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக் கொள்வதாகும். ஊழலற்ற சமுதாயத்தைப் படைக்க, ஐ.நா. சபையால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 10, 1948 - அனைத்துலக மனித உரிமைகள் நாள்
தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், தலை நிமிர்ந்து வாழ வழி செய்வதே, மனித உரிமை. சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடு காட்டி, மனிதனை வேறுபடுத்தக் கூடாது என்பதற்காக, ஐ.நா.சபை இந்த நாளை அறிவித்தது.
டிசம்பர் 10, 1895 - நோபல் பரிசு அளிக்கப்படும் நாள்
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில், நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. 1901ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், நோபலின் நினைவு நாளில், இப்பரிசு வழங்கப்படுகிறது.
டிசம்பர் 11, 1882 - சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள்
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், கவிதைகள் வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர். பத்திரிகை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி என்ற பன்முகம் கொண்டவர். இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழ்நாடு மாநில அரசால், 1949ல் இவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
டிசம்பர் 11, 1969 - விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த நாள்
இந்தியாவின் 'கிராண்ட் மாஸ்டர்'. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், பதினாறு வயதிலேயே, சதுரங்கத்தில் அதிவேகமாகக் காய்களை நகர்த்தி 'மின்னல் சிறுவன்' என்று பெயர் பெற்றார். 2003ல் உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார். இந்திய அரசால், பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் என, பல்வேறு விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 14, 1503 - நாஸ்ட்ரடாமஸ் பிறந்த நாள்
வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து சொன்னவர். பேச்சுத் திறன், தர்க்கம், கணிதம், இசை, ஜோதிடக்கலை ஆகியவற்றில் நிபுணர். 'தி செஞ்சுரீஸ்' என்ற புகழ்பெற்ற ஆரூட புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
டிசம்பர் 15, கி.பி. 37 - நீரோ மன்னன் பிறந்த நாள்
கி.பி. 54 முதல் 68 வரை, ரோமப் பேரரசை ஆண்டார். தனது ஆட்சிக் காலத்தில் ரோமின் வர்த்தகம், கலாசார தலைநகரின் விரிவு ஆகியவற்றில், அக்கறை கொண்டிருந்தார். ஆனாலும், கொடுங்கோல் ஆட்சி புரிந்ததால், இவருக்கு ரோம் நாடாளுமன்றம் மரண தண்டனை விதித்தது.
டிசம்பர் 15, 1832 - குஸ்தேவ் ஈஃபல் பிறந்த நாள்
இவர் ஒரு இரும்புக் கட்டுமான நிபுணர். இரும்பைக் கொண்டு, புதுவிதமான பாலங்களைக் கட்டி பிரபலமடைந்தார். பாரீஸில் இரும்புத் துண்டுகளை வைத்து பிரமாண்டமாகக் கட்டப்பட்ட ஈஃபல் கோபுரத்தை வடிவமைத்து இவர்தான்.
