PUBLISHED ON : செப் 17, 2018

'இன்வால்வ்' - சீனியர் மாணவர்கள், ஜூனியர்களுக்குப் பாடம் நடத்தும் புதிய உத்தியை அறிமுகப்படுத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை முயற்சிக்குத் தலைமை ஏற்றிருப்பவர் திவான்ஷு குமார். பிகாரின் கயா பகுதியைச் சேர்ந்த இவர், ஐ.ஐ.டி. மெட்ராஸில் மெக்கானிக்கல் பொறியியல் மற்றும் ரோபாடிக்ஸ் துறையில் இறுதியாண்டு படிக்கிறார். அவரிடம் 'இன்வால்வ்' பற்றி பேசினோம்:
'இன்வால்வ்' ஸ்டார்ட்அப் பற்றி சொல்லுங்கள்...
'சக மாணவர்கள் கற்பிக்கும் முறை' (Peer teaching method), ஹார்வர்ட் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது. டோனி வேக்னரின் இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு எங்கள் ஸ்டார்ட் அப் திட்டத்தை வகுத்துள்ளோம். அதன்படி, பள்ளி மாணவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறோம். ஒன்று பாடம் சொல்லித் தருபவர்கள். இவர்களுக்கு 'லீடர் ஸ்டூடன்ட்ஸ்' என்று பெயர். 8ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், இதில் இருப்பார்கள்.
மற்றவர்கள், கல்வி கற்கும் மாணவர்கள். இவர்கள், 8ஆம் வகுப்புக்கு கீழே உள்ளவர்கள். பள்ளி நேரம் முடிந்தவுடன், லீடர் மாணவர்கள் பாடம் எடுக்க, ஜூனியர்கள் கற்றுக்கொள்வார்கள்.
லீடர் மாணவர்களுக்கு எப்படி பயிற்சியளிப்பீர்கள்
தொடர்புத்திறன், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை, பயிற்சிப் பட்டறைகள் மூலம் லீடர் மாணவர்களுக்குப் போதிக்கிறோம்.
ஜூனியர்களுக்கு பாடம் சொல்லித் தரும்போது, தாங்கள் கற்றதை, லீடர் மாணவர்கள் செயற்படுத்திப் பார்ப்பார்கள். அப்போது எழும் சந்தேகங்களை எங்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். லீடர் மாணவர்களின் முன்னேற்றத்தை, நாங்கள் கண்காணிப்போம். மாணவர்களின் நடத்தைகளையும் கண்காணிப்போம்.
லீடர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்
வகுப்பில் நல்ல தரவரிசையில் உள்ள மாணவர்களையே தேர்வு செய்கிறோம். அவர்கள் பாடத்தை நன்கு அறிந்திருந்தால்தான், சொல்லித்தர முடியும். தாம் கற்றுக்கொண்டதைப் பிறருக்குப் பகிர வேண்டும்; எளிமையாகச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்டோருக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
பெற்றோர் எப்படி ஒத்துழைக்கின்றனர்
மனப்பாடக் கல்வியைத் தாண்டி, வாழ்க்கைக்கு அவசியமான திறன்கள் தேவை என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைக்க வேண்டும். 'இன்வால்வ்' திட்டத்தின் மூலம் பிள்ளைகளின் தலைமைப் பண்பு மேம்படும் என்று அவர்கள் உணரும்போது, வரவேற்கிறார்கள்.
இத்திட்டம் எத்தனை பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது
இப்போதைக்கு சென்னை, பெங்களூருவில் ஆறு பள்ளிகளில் மட்டும் செயற்பட முடிவெடுத்துள்ளோம்
.
உங்கள் முயற்சியில் என்னென்ன சிக்கல்கள்
மாணவர்களை, பள்ளி நேரம் முடிந்த பிறகும் இருக்க வைப்பதுதான் முதல் சவால். ஆனால், ஒருமுறை எங்கள் கற்றல் சூழலுக்கு வந்துவிட்டால் அதன்பிறகு பிரச்னை இருக்காது. காரணம், பங்கேற்பு (Participatory - பார்டிசிபேட்டரி) முறையிலான கற்றலைத்தான் கடைப்பிடிக்கிறோம்.
பள்ளிநேரத்திலேயே இதை செய்ய முடியாதா
பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே பிசியான பாடத்திட்டம் இருக்கிறது. இதனால், எங்களுக்கு நேரம் கிடைப்பது சிரமமாக உள்ளது.
மாணவர்களிடம் மாற்றங்களை உணர்கிறீர்களா
நிச்சயமாக... எப்படிச் சொன்னால் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பதை, லீடர் மாணவர்கள் பரிந்துரைக்க இடமளிக்கிறோம். உதாரணத்துக்கு, லீடர் மாணவர் ஒருவர், கூட்டலையும் கழித்தலையும் விளையாட்டாகப் புரிந்துகொள்ள 'பரமபத முறையை' உருவாக்கியுள்ளார்.
எதிர்காலத்திட்டங்கள்
டியூஷன்கள் வியாபாரமாகிவிட்டன. இச்சூழலை மாற்றி, குறைவான கட்டணம், தரமான கல்வி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மறுபுறம், வாழ்க்கைக்கு அவசியமான திறன்களை மாணவர்கள் பெற வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் 150 பள்ளிகளில் செயற்பட்டு, 5,000 மாணவர் தலைவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், தனியார் பள்ளி மாணவ லீடர்கள், அரசுப் பள்ளிகளுக்கு சென்று வகுப்புகள் எடுக்கும் திட்டத்தையும் உருவாக்கியுள்ளோம்.

