PUBLISHED ON : ஆக 20, 2018

கேரளத்தில் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மாணவர்கள், படிப்புக்காகவும் நேரம் ஒதுக்குவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால், அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளன. தற்போதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பவர்களை மீட்கும் பணியில் இராணுவ விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 80 அணைகள் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
வழக்கமாக கேரளத்தில் ஆகஸ்ட் கடைசியில், பள்ளித் தேர்வுகள் நடைபெறும். ஆனால், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால், தங்கள் பிள்ளைகள் எப்படிப் படிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பெற்றோர் உள்ளனர். ஆனால், பெற்றோருக்கு நம்பிக்கை தரும் விதமாக, நிவாரண முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் புத்தகப்பைகளை இலவசமாக வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு, சிறப்பு வகுப்புகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முகாம்களில் நிலவும் பல பிரச்னைகளுக்கு நடுவே, படிப்பதற்காகவும் மாணவர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பொதுக்கல்விச் செயலாளர் எ.ஷாஜஹான், 'அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு இதுதொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம். மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.' என்றார்.
