PUBLISHED ON : டிச 30, 2019
ஒவ்வொரு மாணவரும் பெற்றோரும் சிரமப்படுவது எதிர்காலம் பற்றித்தான். என்ன துறையைத் தேர்வு செய்து மேற்கொண்டு படிப்பது; படிக்க வைப்பது? எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளவே பலரும் பிரியப்படுகிறார்கள்.
இதைக் கண்டுபிடிக்க உதவுவதுதான் 'தமன்னா' (Tamanna). வலைத்தளம். கடந்த ஆண்டு அறிமுகமான மிக முக்கியமாக விஷயமாக நான் இதைக் கருதுகிறேன்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கெளன்சிலும் (என்சிஇஆர்டி) சேர்ந்து பள்ளி மாணவர்கள், தாங்களே, தங்கள் எதிர்கால ஆர்வத்தை அறிந்துகொள்ள ஒரு திறனாய்வு சோதனையை உருவாக்கியுள்ளனர்.
9ஆம் வகுப்பு முதலே இச்சோதனையில் கலந்துகொள்ளலாம். ஒரு மாணவரது துறைசார்ந்த ஆர்வம், ஈடுபாடு, அதில் அவர்களது அறிவு போன்ற விஷயங்களை அறிந்துகொள்ளமுடியும்.
இதனால் 12ஆம் வகுப்புக்குப் பின் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டாம்.
இந்தத் திறனறியும் சோதனையின் பயன்பாடு, சோதனையில் அளவிடப்பட்ட பரிமாணங்கள், சோதனையின் கட்டுமானம், தரப்படுத்தல், நிர்வாகம் மற்றும் சோதனை மதிப்பெண்களின் பொருளைப் புரிந்துகொள்வதற்கான விவரங்கள் அடங்கிய கையேடும் கிடைக்கின்றன.
மாணவர்களைப் புரிந்துகொள்வதற்காக ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான வழிகாட்டியும் தமன்னா வலைத்தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான தேர்வுகள்போல, இந்தத் தேர்வில் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ இல்லை என்பதையும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தத் திறனறிதல் சோதனையில், ஆர்வமுள்ள மாணவர்கள் தாமாக முன்வந்து பங்கேற்க வேண்டும், மேலும் எந்தவொரு பாடத்தையும், மேற்படிப்புகள் அல்லது தொழில்கள் போன்றவற்றை மாணவர்கள் மீது திணிக்கப் பயன்படுத்தக்கூடாது என்றும் தமன்னா திட்டம் தெளிவாக வரையறை செய்கிறது.
தங்களின் எதிர்காலத் திட்டமிடலுக்காக இச்சோதனையில் 9ஆம், 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே கலந்துகொள்ளவேண்டும்.
சுட்டி :http://ncert.nic.in/tamanna/tamanna.html
ஜி. நளினி,
பதின்பருவ உளவியலாளர், செயற்பாட்டாளர்

