PUBLISHED ON : ஜூன் 18, 2018

உற்சாகமும் சுறுசுறுப்பும் இருந்தால், நம் முயற்சிகளில் வெற்றி பெறலாம். எப்போதும் உற்சாகமாக இருக்க இன்றைய மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? சென்னை, ராயப்பேட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். உற்சாகம் தெறிக்கும் அவர்களின் பதில்கள்...
ஸ்ருதி, 9ஆம் வகுப்பு
நான் சத்தான காய்கறிகளையும் பழங்களையும் ஒதுக்க மாட்டேன். வீட்ல இருக்கறப்போ, பசி வந்த பிறகுதான் சாப்பிடுவேன். சிலர், ராத்திரியில தூங்காம மொபைல்ல கேம் விளையாடிட்டோ, வேறு வேலைகளைச் செய்துட்டோ, ஸ்கூல்ல வந்து தூங்குவாங்க. அவங்க எப்போதும், சோம்பலோடதான் இருப்பாங்க. நான் தினமும், ராத்திரி பத்து மணிக்கெல்லாம் தூங்கிடுவேன். காலையில ஆறு மணிக்கு எழுந்திடுவேன். கொஞ்சநேரம் யோகா செய்வேன். அதனால, எனக்கு, உற்சாகமா இருக்கும். சரியா தூங்கலைன்னா சோம்பலா இருக்கும்; படிக்கிறதெல்லாம் மறந்து போயிடும். ஸ்கூல்ல, த்ரோ பால், கோகோ, லாக் அண்டு கீ விளையாடுவேன். வீட்ல, படிக்கிற நேரம் போக மத்த நேரத்துல செஸ், கேரம், பஸில், சுடோகு விளையாடுவேன். ஸ்கூல்ல, எப்பவும் தோழிகளோட சிரிச்சு ஜாலியா இருப்பேன்.
ஜெ.ஹெலன், 9ஆம் வகுப்பு
எப்பவுமே உற்சாகமா இருக்கணும்னு நினைப்பேன். அதுக்கு, ஆரோக்கியமா இருக்கணுமில்ல; அதனால, பாதாம் பால், பேரீச்சம் பழம் போன்ற சத்தான உணவுகளைச் சாப்பிடுவேன். எண்ணெய் அதிகமா இருக்கற பண்டங்களைத் தவிர்த்திடுவேன். என்னதான் ருசியா இருந்தாலும், அதிகமா சாப்பிடாம அளவோட சாப்பிடுவேன். ஸ்கூல்ல போர் அடிச்சா, தோழிகள் கிட்ட ஜோக் அடிச்சு சிரிப்பேன். விளையாட்டு நேரத்துல உற்சாகமா விளையாடுவேன். வீட்டுல தனியா இருந்தா பாட்டு கேட்பேன். வீட்டுல ரொம்ப போர் அடிச்சா, தூங்கிடுவேன். பிடிக்காத விஷயங்களை செய்யவோ, பிடிக்காதவங்ககூட பழகவோ மாட்டேன்.
எல்.ரேகா, 9ஆம் வகுப்பு
தூங்க வேண்டிய நேரத்துல தூங்கி, எழ வேண்டிய நேரத்துல சரியா எழுந்திடுவேன். வகுப்புல பாடங்களை ஆர்வத்தோட கவனிப்பேன். அதனால, படிக்கும்போது நல்லா புரியும். புரியலைன்னா, ஆசிரியர்கிட்ட கேட்டுடுவேன். படிப்புல போர் அடிச்சாதான் களைப்பா இருக்கும். அதுக்கு இடம் கொடுக்க மாட்டேன். வீட்டுக்குப் போனதும் கார்ட்டூன்களை வரைவேன். கார்ட்டூன் வரைஞ்சு முடிச்சதும் சந்தோஷமா இருக்கும். பளிச் பளிச் வண்ணங்களை பார்க்கறதே சந்தோஷம்தான். வரைஞ்சதை தோழிகளுக்குப் பரிசா கொடுப்பேன். தோழிகளோட பிறந்த நாளுக்கு, மெஹந்தி போடுவேன். புதுசு புதுசா வரையறதால பாராட்டுவாங்க. அதனால, உற்சாகத்துக்குக் குறைவிருக்காது.
எம்.பிரனீத், 10ஆம் வகுப்பு
தினமும் காலையில எழுந்து காலைக்கடன்களை முடிச்சுட்டு, ராயப்பேட்டையில இருந்து மெரினா பீச் வரைக்கும் நடந்துட்டு வருவேன். அதுவே ரொம்ப புத்துணர்ச்சியாயிடும். என்னதான் டேஸ்ட்டான சாப்பாடா இருந்தாலும், சத்தில்லைன்னு தெரிஞ்சா, சாப்பிட மாட்டேன். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை தெரிஞ்சுக்குவேன். படிக்கிறது, எழுதுறது ரொம்ப பிடிக்கும். பேசறதைவிட நிறைய கேட்கணும்னு நினைப்பேன். தினமும், டைரில கவிதை எழுதுவேன். பெற்றோர், நட்பு, அன்புன்னு பல தலைப்புகள்ல கவிதை எழுதி நானே ரசிச்சுக்குவேன். காய்கறி வெட்டுறது மாதிரியான சின்னச் சின்ன உதவிகளை அம்மாவுக்கு செய்வேன். இது மாதிரி மனசுக்குப் பிடிச்ச விஷயங்களை செய்றதால உற்சாகமா இருப்பேன்.
பி.கார்த்திகேயன், 10ஆம் வகுப்பு
புட்பால், கிரிக்கெட் விளையாடுறது ரொம்பப் பிடிக்கும். தனியா இருக்கறது, கடுகடுன்னு பேசுறதெல்லாம் பிடிக்காது. சிரிச்ச முகத்தோடுதான் பேசுவேன். விளையாடும்போது, நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. அவங்க கூடவே இருக்கறதால சந்தோஷத்துக்கு பஞ்சமே இருக்காது. நேரத்துக்குத் தூங்கிடுவேன். சத்தானதைச் சாப்பிடுவேன். தினமும், மூணு பாட்டில் தண்ணி குடிப்பேன். ரொம்ப நேரம் டி.வி. பார்க்கறதோ கதைப் புத்தகம் படிக்கிறதோ பிடிக்காது. ஸ்போர்ட்ஸ் சேனல், டிஸ்கவரி சேனல்கள்தான் பார்ப்பேன்.
வி.சூர்யா, 9ஆம் வகுப்பு
என் வீட்டைச் சுத்தி நிறைய சின்னப் பசங்க இருக்காங்க. அவங்களோட நிறைய கேம்ஸ் விளையாடுவேன். சின்ன பசங்கதான், ரொம்ப கேள்வி கேட்பாங்க. அதனால, நாம நிறைய தெரிஞ்சக்கணும்னு தோணும். நாம பதில் சொல்றதால நம்மளை எப்பவும் சூழ்ந்துக்குவாங்க. புதுசு புதுசா கேம் யோசிச்சு விளையாடுவோம். அதனால், வீட்டுல போர் அடிக்காது. பெரிய பசங்களோட, சைக்கிள் போட்டில கலந்துக்குவேன். வகுப்புல தூக்கம் வர்ற மாதிரி இருந்தா, டக்னு எழுந்து, ஏதாவது சந்தேகம் கேட்பேன். பசங்களும் நம்மளைக் கவனிப்பாங்க. ஆசிரியரும், புரியும்படி மறுபடி விளக்கிச் சொல்வாங்க. அதனால், உற்சாகமாயிடும். தப்பு பண்ணினா, உடனே, நண்பர்கள் கிட்ட மன்னிப்புக் கேட்டுடுவேன். அதனால, பெரிய பிரச்னைகூட, ஆரம்பத்திலேயே முடிஞ்சிடும்.
