PUBLISHED ON : ஜன 09, 2017

நன்னாரி ஆங்கிலப் பெயர்: 'சர்சாபரில்லா' (Sarsaparilla)
தாவரவியல் பெயர்: 'ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ்' (Hemidesmus Indicus)
வேறு பெயர்கள்: கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி, பாதாள மூலி, சுகந்த மூலி, காணறுசாரி
'அஸ்க்லெபியாடாசியே' (Asclepiadaceae) குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். கொடியாக தரையில் படரும். இது வெப்ப மண்டலத் தாவரம். சமவெளிகள், புதர்க் காடுகளில் அதிகம் வளரும். மலைப்பகுதியில் வளரும் நன்னாரி வேர், தடித்து இருக்கும். கொடியின் தண்டு மெல்லியதாக இருக்கும். எதிர் எதிராக அமைந்த, நீண்ட இலைகளைக் கொண்டிருக்கும். பூக்கள் வெளிப்புறம் பச்சையாகவும், உட்புறம் செம்மை கலந்த ஊதா நிறத்திலும் இருக்கும். வேரின் மேற்புறம் கறுப்பு நிறமாகவும், உட்பகுதி வெண்மை நிறமாகவும், நல்ல மணம் உடையதாகவும் இருக்கும். வேரின் சுவை இனிப்பும், கசப்பும் கலந்து இருக்கும்.
நன்னாரி இரு வகைப்படும். வேர்கள் சிறியதாக உள்ள சிறு நன்னாரியின் பூக்களின் நிறம் மஞ்சள். இலைகள் அகலத்தில் குறுகியவை. இவை சமவெளிகள், புதர்க்காடுகளில் வளர்கின்றன. வேர்கள் பெரியதாக உள்ள, பெரு நன்னாரி மலர்களின் வண்ணம் கருஞ்சிவப்பு. இலைகள் அகலமானவை. இவை மலைப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வளர்கின்றன. இந்தச் செடியின் வேரை, உலர்த்திப் பொடி செய்து உருவாக்கப்படும் குளிர்பானம் சர்பத். இது வெகு பிரபலம். உடலைக் குளிர்ச்சியாக்கும். விதை, நாற்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மூலிகைக் குணம் நிறைந்தது. செடி, மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. அதனாலேயே பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. தெற்கு ஆசியாவிலும், இந்தியா, தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.
பாகங்கள்
1. வேர்
2. பட்டை
3. இலைகள்
வகைகள்
1. சீமை நன்னாரி
2. பெரு நன்னாரி
3. கரு நன்னாரி
- கிருஷ்ணன்
