PUBLISHED ON : பிப் 27, 2017

கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் பண்டை சமூகத்தில் இருந்தது. மன்னர் இறந்தால், ராணியும் தீயில் விழுந்து உயிர் துறந்திறக்கிறார். ஆனால் மன்னரின் மனைவி இறக்கும்போது, அந்தப் பிரிவை, துயரத்தைப் போற்றும் பதிவுகள், பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு.
காரணம் மன்னர்களுக்கு பல ராணிகள். ஒரு மனைவியின் இறப்புக்காக அவர்கள் உருகவில்லையா? அல்லது அவர்களுக்கு துயரத்தை வெளிப்படுத்த நேரம் அமையவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால், ஒரே ஒரு மன்னர் மட்டும், தன் மனைவி இறந்தபோது, மிகுந்த மனவருத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார். ஆறாதுயரத்தில் கவிதையும் எழுதியிருக்கிறார். அந்த மன்னர், சேரமான் கோட்டம்பத்து துஞ்சிய மாக்கோதை. இவர் இயற்றிய அந்தத் துயரப் பாடல் இது.
யாங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல்; என்இதன் பண்பே!
புறநானூறுற்றில் 245ம் பாடலாக இப்பாடல், வைக்கப்பட்டுள்ளது.
கள்ளிச்செடிகள் வளர்ந்திருக்கும் சுடுகாட்டில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த விறகின் மீது, உயிரற்ற அவள் உடலைக் கிடத்தினேன். கிடத்திய உடலுக்கு தீ வைக்கப்பட்டுவிட்டது. அவள் உடல் எரிந்து மேலுலகம் சென்றுவிட்டாள். என் நெஞ்சின் துயரம் மிகப் பெரியதுதான். ஆனால் அந்தத் துயர், ஏன் அவளுடனே என்னைக் கூட்டிச்செல்லாமல், உயிரை என்னுடனே ஒட்டும்படி செய்திருக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார். அவளோடு நானும் உயிர்விடவில்லையே என்பதுதான் இப்பாடலின் பொருள்.

