
'அறம் செய விரும்பு' என்றார் ஔவை. பிறருக்கு உதவுதல் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய குணம். இன்றைய காலகட்டத்தில் பலரும் சுயநலத்துடனே நடந்து கொள்கிறார்கள். 'உதவும் குணம் குறைந்து வருகிறதா-?' என்ற தலைப்பில் சென்னை, ஜார்ஜ் டவுன், பிஷப் காரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள்.
ந. கௌஷிக்
யாருக்காவது அடி பட்டுட்டாகூட உதவத் தயங்கறாங்க. நமக்கு ஏன் வம்புன்னு நினைக்கற மனப்பான்மை அதிகம் இருக்கு. எல்லோரும் இப்படி இருந்தா, யாருக்குமே நல்லதில்ல. உறவினர்களுக்கு உதவற வழக்கம் முன்னே எல்லாம் இருந்தது. இப்ப யாரும் அப்படியில்ல.
ப. மாதவன்
உதவி செய்யற மனப்பான்மை நமக்குள்ள இருக்கணும். உதவின்னா பணம், பொருள் உதவி மட்டுமில்ல. முதியவர்களுக்கு செய்யற சின்ன உதவிகள், படிக்கத் தெரியாதவங்களுக்குச் சொல்லித்தரதுன்னு பல விஷயம் இருக்கு. நாம ஒருத்தருக்கு உதவி செஞ்சா, நமக்கு அது வேறு வழியில நிச்சயமா உதவியா கிடைக்கும்.
மு. மோனிஷ் பாலாஜி
மத்தவங்க கிட்ட கனிவா, இருக்கணும். இந்தக் காலத்துல சகிப்புத்தன்மை ரொம்ப குறைஞ்சிடுது. முடியாதவங்களுக்கு பேருந்துல இடம் கொடுக்கறது, படிவங்களைப் பூர்த்தி செய்ய உதவறது, படிப்பறிவில்லாதவங்களுக்கு கையெழுத்துச் போட சொல்லித்தரது இதுபோல உதவிகளை நாம செய்யப் பழகணும்.
பெ. கோதவரதணன்
அடுத்த வீட்ல யாரு வசிக்கறாங்கன்னுகூட தெரிஞ்சுக்காத ஒரு வாழ்க்கைமுறை இப்ப நகரங்கள்ல இருக்கு. திடீர்னு உடல்நிலை சரியில்லன்னா கூட உதவிக்கு ஆள் கிடைப்பதில்லை. முதியோர்களின் நிலை இன்னும் மோசம். நம்மால முடிஞ்ச சின்னச்சின்ன உதவிகளை நாம பிறருக்குச் செய்யணும்.
ஜீ.வேணுகோபால்
ஒருத்தருக்கு படிக்க சொல்லிக்கொடுக்கறதால நம்ம அறிவு மேலும் வளருமே தவிர குறையாது. உதவி என்பது இதுதான். உதவும் பழக்கத்தை மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே கத்துக்கொடுக்கணும். இல்லாதவருக்கு இரங்குதலே உண்மையான உதவி.
மு.டினேஷ்
எல்லோருடனும் அன்பாவும், கனிவாவும் நடந்துக்கறதே நாம பிறருக்குச் செய்யற பெரிய உதவி. இந்த அடிப்படைப் பண்பை வளர்த்துக்கிட்டா நாம நல்லதையே செய்வோம். மரம் வளர்ப்பதுகூட ஒரு பெரிய உதவிதான். எதிர்கால சமூகத்து மேல காட்டற அக்கறை அது. நாமும் நல்லாயிருக்கணும். பிறரையும் நல்லாயிருக்கணும்னு நினைக்கணும்.
நா.சஞ்சனா
சுயநலம் இப்போது அதிகமா ஆகிடுச்சு. அரசு, அமைப்புகள் மட்டும்தான் சமூக உதவி செய்யணும்னு நினைக்கறோம். சமூகத்துல இருக்கற ஒவ்வொருத்தருக்கும் உதவும் கடமை இருக்கு. ரத்த தானம், கண் தானம் போன்றவை பத்தி மக்கள்கிட்டே விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவி செய்யலாம்.
செ.பிரதிக் ஷா
வீட்டுல பெற்றோருக்கு, வயசானவங்களுக்கு அவங்க வேலையில உதவியா இருக்கணும். இப்படியான உதவிகளை செஞ்சு பழக்கப்படுத்திக்கிட்டா நமக்கு வளர வளர அடுத்தவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவி செய்யணும்னு தோணும்.

