PUBLISHED ON : ஏப் 11, 2016

சுந்தரும் கலையும் காட்டுக்குச் சென்றார்கள். அவர்கள் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கியபோது, தவறுதலாக ஒரு கரடிக்குக் குறுக்கே ஓடினார்கள். ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில் கரடி அங்கிருந்து சென்றுவிட்டது. சுந்தருக்குத் தாகமாக இருந்தது. கலையிடம், ''எனது தண்ணீர் வெளியே ஓடிவிட்டது. உன் தண்ணீரை எனக்குத் தருகிறாயா?'' என்று கேட்டான்.
1) தவறுதலாக ஒரு கரடிக்குக் குறுக்கே ஓடினார்களா? கரடி எப்படி இவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டது? இது ஒரு கேள்வி.
2) எனது தண்ணீர் ஓடி விட்டது? கீழே கொட்டிவிட்டதா? இது அடுத்த கேள்வி.
என்ன சொல்ல வருகிறார்கள் என்ற குழப்பம் வருகிறதுதானே!
Sundar and Kalai went to the forest. As they both started to walk fast, they accidentally ran across a bear. They hid behind a tree. After some time, the bear left the place. Sundar was thirsty. He said to Kalai, ''My water ran out. Can you please give me your water?''
அட! ஆங்கிலக் கதையில் 'ran across','ran out' என்று வருகிறது. 'run' என்பதற்கு ஆங்கிலத்தில் 'ஓடு' என்ற அர்த்தம்தான். அதே போல 'across' என்பதற்கு 'குறுக்கே' என்றும், 'out' என்பதற்கு 'வெளியே' என்றும் அர்த்தம். இது நம் எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் ran என்ற வார்த்தையும், across என்பதும் சேர்ந்து, 'ran across' என்று வரும்போது, 'தற்செயலாகப் பார்க்க நேரிட்டது' என்று பொருள். அதே போல் 'ran out' என்பதற்கு 'தீர்ந்துவிட்டது' என்று அர்த்தம் வரும்.
'ran across' 'ran out' போன்ற சொற்களுக்கு ஆங்கிலத்தில் 'Phrasal verbs' என்று பெயர். இந்த வினைச் சொற்களில் run, give, put போன்ற, எழுத்துகள் குறைவாக இருக்கும் சிறிய வினைச்சொற்களும், across, out, in போன்ற இடைச் சொற்களும் (Preposition/adverb) இருக்கும்.
'Phrasal verbs' பயன்படுத்தாமலேயே ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியும். இருந்தாலும், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதிகமாக Phrasal verb பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுவது நமக்குப் புரிய வேண்டும் அல்லவா... அதனால்தான் Phrasal verb பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
