PUBLISHED ON : ஏப் 18, 2016

நிலப்பரப்பிலும் நீரிலும் வாழ்ந்து, மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை மரம், செடி, கொடி, புற்கள் போன்ற தாவரங்கள். உலகத்தின் முதன்மை உணவு உற்பத்தியாளர்களும் தாவரங்கள்தான்!
ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குத் தானாக நகராமல் இருப்பதால் இவைகளை 'நிலைத்திணை' என்றும் சொல்லலாம். இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 655 தாவர இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் நன்னீர்த் தாவரங்களும் உண்டு.
கம்மல் செடி (Water Fern)
தாவரவியல் பெயர்: அசோலா (Azolla)
தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி (Fern) வகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி அல்லது கம்மல் செடி. கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. மிகச் சிறிய இலைகளையும் நுண்ணிய வேர்களையும் கொண்டது. இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இதன் வளர்ச்சிக்கு 35 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.
ஆம்பல் (Water Lily)
தாவரவியல் பெயர்: - நிம்பே ஆல்பா (Nymphaea alba)
அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியையும் அதில் பூக்கும் மலரையும் குறிக்கிறது. அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. இந்த மலரைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. அல்லி, மாலையில் மலர்ந்து காலையில் கூம்பும்!
'சைபரஸ் டுபர்ஸ்' (Cyperus Tubers) என்ற தாவரம் ஊதுவத்தி, வாசனை திரவியத் தயாரிப்பில் பயன்படுகிறது.
'லெம்னா ஜிபா' (Lemna Gibba) என்ற தாவரம் அழுக்குத் தண்ணீரைச் சுத்திகரிக்கவும் எரிசக்தி உற்பத்திக்கும் பயன்படுகிறது.
