PUBLISHED ON : ஜூலை 03, 2017

ஓர் உணவகத்திற்குப் போய், மசாலா தோசை ஆர்டர் கொடுக்குறீர்கள். கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பின், உங்கள் டேபிளுக்கு இட்லியும் வடையும் கொண்டு வந்து வைக்கிறார் உணவு பரிமாறுபவர். நீங்கள் என்ன செய்வீர்கள்?!
இதுமாதிரி, கேட்டதைக் கொடுக்காமல் வேறு மாற்றிக்கொண்டு வந்துகொடுத்தால்... வாடிக்கையாளர்கள் கோபப்படுவதும், சண்டை பிடிப்பதும்தான் வழக்கமாக நடக்கும். ஆனால், டோக்கியோவில் உள்ள ஓர் உணவகத்தில் இந்த நிலை தலைகீழ்.
அங்கே நீங்கள் கேட்கும் உணவே உங்களுக்குப் பரிமாறப்படும் என்று உத்தரவாதமில்லை என்பதைக் குறிக்கும் விதமாக, 'கேட்பது கிடைக்காது' (Restaurant of Order Mistakes) என்றே அவ்வுணவகத்தின் பெயராக உள்ளது. இந்த உணவகத்தில் பரிமாறுபவர்கள் அனைவரும், அம்னீஷியா போன்ற மறதிநோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, அவர்களிடம் தரப்படும் உணவுப் பட்டியல் பெரும்பாலும் மாறிவிடுகிறது. ஆனால், அவர்களின் நிலை தெரியும் என்பதால், வாடிக்கையாளர்கள் இதற்கென கோபப்படுவதில்லை.
முதலில் சோதனை முயற்சியாக, பகுதி நேரமாக சில நாட்களுக்கு மட்டும் செயல்பட்ட இந்த உணவகம், மக்களின் ஆதரவால் விரைவில் முழுமையாக இயங்க உள்ளதாக, இதன் அமைப்பாளர்களான மேகீஸ் டோக்கியோ (Maggie's Tokyo) நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
