PUBLISHED ON : டிச 09, 2019

பொதுத் தேர்தல் தெரியும்: அரசியல்வாதிகள் ஆங்காங்கே மைக் பிடித்துப் பேசுவதும், விதவிதமான சின்னங்கள் அச்சடித்த நோட்டீஸ்களைக் கொடுப்பதும், “வாக்களியுங்கள்!” என்ற வார்த்தைகளும் பிரபலம். ஆனால், அது என்ன உள்ளாட்சித் தேர்தல்? மற்ற தேர்தல்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
நம் ஜனநாயக ஆட்சியில், மக்கள் தங்களுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைதான் தேர்தல்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் அமர்ந்து சேவை செய்வர்.
ஏறக்குறைய இதேதான் உள்ளாட்சித் தேர்தலும் - ஆனால், இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தலைநகரங்களில் இருந்து மட்டும் ஆட்சி செய்தால் போதாது அல்லவா?
மாநிலம் முழுவதும், மிகப்பெரும் நகரம் முதல் கடைசி குக்கிராமம் வரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குட்டி ஆட்சியமைப்பு உண்டு. அவற்றில் பணி செய்யவேண்டியவர்களும் உண்டு. அவற்றை, நம் அரசாங்கம் கீழ்க்கண்டவாறு பிரித்திருக்கிறது.
* மாநகராட்சி
* நகராட்சி
* பேரூராட்சி
* ஊராட்சி
* ஊராட்சி ஒன்றியம்
மக்கள்தொகையையும், அதற்கு ஈடான அரசாங்க நிதிக்கும் ஏற்றவாறு இப்பிரிவுகள் அமையும். இதில் முதல் மூன்று அமைப்புகளும் நகரம் சார்ந்தவை; அடுத்த இரண்டும் கிராமம் சார்ந்தவை.
இவற்றின் தலைவர்களையும், உறுப்பினர்களையும் அந்தந்த மாநகராட்சி முதல் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்பதுதான், உள்ளாட்சித் தேர்தல். சுருக்கமாகச் சொன்னால், இத்தேர்தல் நடந்தால்தான் குடிமக்கள் அனைவருக்கும் நன்மைகளும் நலத்திட்டங்களும் சென்றடையும், குறைகள் தீரும்.
