PUBLISHED ON : அக் 22, 2018

மாணவ பருவத்தில் பாடப் புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு எப்போதுமே உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும். புனைகதைகளில் இன்றைய மாணவர்கள் விரும்புவது துப்பறியும் கதைகளையா, மாயாஜாலக் கதைகளையா, எதை விரும்புகிறீர்கள் என்று கேட்டிருந்தோம். சென்னை, பல்லாவரம், வேல்ஸ் வித்யாஸ்ரமம் சீனியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
ரா. செரில்: (12ஆம் வகுப்பு)
துப்பறியும் கதைகள் எனக்குப் பிடிக்கும். ஏன்னா, ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் எப்படி அணுகுவது? சிந்திப்பது போன்ற விஷயங்களை இதிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். தேவனின் துப்பறியும் சாம்பு, தமிழ்வாணனின் சங்கர்லால் போன்ற கதைகள் பிடிக்கும்.
அ.மதுமிதா: (12ஆம் வகுப்பு)
மாயாஜாலக் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். அன்றாட வாழ்க்கையில் நடக்காத பல விஷயங்கள், புதுமையாக இருக்கும். திடீர்ன்னு பறப்பாங்க. உருவம் மாறுவாங்க. நம்ம கற்பனையை வளர்ப்பதில் இக்கதைகள் ரொம்பவும் உதவும். ஹாரிபாட்டர் மாதிரி மாயாஜால உலகத்தில் நடப்பது மிகவும் பிடிக்கும்.
ப.திவ்யாஸ்ரீ: (12ஆம் வகுப்பு)
மாயாஜாலக் கதைகளே எனக்கும் பிடிக்கும். இந்த மாதிரி கதைகள் மனஅழுத்தத்தைக் குறைச்சு மகிழ்ச்சியைக் கொடுக்குது. இக்கதைகள் கட்டுப்பாடுகளற்ற, அதேசமயம் உற்சாகம் கொடுக்கக்கூடிய அனுபவங்களைக் கொடுக்குது. ரெளலிங் எழுதின, ஹாரி பாட்டர், ரிக் ரியாடன் எழுதின பெர்சி ஜாக்சன் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
சௌ. விஷ்ணுபிரியன்: (12ஆம் வகுப்பு)
எனக்குப் புதிர்கள் அடங்கிய துப்பறியும் கதைகள் பிடிக்கும். இக்கதைகளில் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகப் படிக்கணும். அதில் புதிர்க்கான விடை ஏதாவது ஒரு வார்த்தையில் தான் ஒளிஞ்சு இருக்கும். அதனால அதை படிக்கும்போதே உஷாரா படிக்கணும். செம திரில்லா இருக்கும். ஷெர்லாக் ஹோம்ஸ் என் ஃபேவரைட்.
செ.தனுஜா: (10ஆம் வகுப்பு)
மாயாஜாலக் கதைகள் மூலமா வேறுவேறு கோணத்தை அறிஞ்சுக்க முடியும். மனித வாழ்க்கையில் கற்பனை மிக முக்கியமானது. மாயாஜாலக் கதைகளின் ஆசிரியர்கள் கற்பனையில் படைத்திருக்கும் பல விஷயங்கள் விஞ்ஞான உலகில் சாத்தியமாகிக்கொண்டு இருக்கு. உதாரணமா, தூர இருப்பவரது முகத்தைப் பார்த்து பேசும் பெட்டி இருப்பதுபோல எழுதி இருப்பாங்க. அதெல்லாம் இன்னிக்கு சாத்தியமாகியிருக்கு.
சு.ராஜலக்ஷ்மி: (10ஆம் வகுப்பு)
துப்பறியும் கதைகளில் சிக்கல் மேல் சிக்கல் வச்சு, கடைசியிலதான் புதிரை அவிழ்ப்பார்கள். அவ்வளவு பொறுமை எல்லாம் எனக்கு இல்லை. மாயாஜாலக் கதைகள் ரொம்ப பிடிக்கும். எனக்கு ஓவியம் வரையப் பிடிக்கும் என்பதால் மாயாஜாலக் கதைகள் எனது கற்பனைக்கு நல்ல தீனி.
