PUBLISHED ON : மார் 04, 2019

பள்ளிப் பருவத்தில் பிறந்த நாள் என்பது ஒரு கொண்டாட்டமான உற்சாகம்தான். சீருடை அணியாமல் அன்று மட்டும் புதிய வண்ண ஆடைகளில் பள்ளிக்குள் வலம் வரலாம். 'உங்கள் பிறந்த நாளை எங்கு கொண்டாட விரும்புகிறீர்கள்; பள்ளியிலா? வீட்டிலா?' என கேட்டிருந்தோம். விருதுநகர், காரியாபட்டி, செயின்ட் மேரீஸ் மெட்ரிக். பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ:
பெற்றோருடன் ஏதாவது ஒரு முதியோர் இல்லம் சென்று கொண்டாட வேண்டும். அங்கிருக்கும் பெரியோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்களுக்கு புது டிரஸ் வாங்கித்தர நான் விரும்புகிறேன்.
எஸ்.வாஷிகா குதைனா, 8 ஆம் வகுப்பு
எனது பிறந்த நாளை, உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறேன். அடுத்தமுறை ஆதரவற்றோர் விடுதிகளில் வளரும் குழந்தைகளுடன் பிறந்தநாளைக் கொண்டாட விரும்புகிறேன். அவர்களுக்கு எனது பெற்றோர் மூலம் பரிசு கொடுத்து மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
ஆர்.அஸ்லம் தவுபிகா, 9 ஆம் வகுப்பு
வீட்டில்தான் இதுவரை எனது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறேன். பள்ளி நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அன்றைய தினம் இனிப்புக் கொடுப்பேன். அவர்கள் என்னை வாழ்த்திப் பரிசுகளைக் கொடுக்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆர்.ஏஞ்சல் கிருபா, 7ஆம் வகுப்பு
எனது பிறந்த நாளை பள்ளியில் இனிப்புகள் வழங்கி, வீட்டில் பெற்றோர், உறவினர்களுடனே கொண்டாடி வருகிறேன். இதுவே மகிழ்ச்சியாக உள்ளது.
எஸ்.ஹர்தீப், 7ஆம் வகுப்பு
கோடை விடுமுறையில் தான் எனது பிறந்த நாள் வரும். அதனால் எப்போதும் வீட்டில்தான் கொண்டாடி இருக்கிறேன். பள்ளியில் நண்பர்களுடன் கொண்டாட வேண்டும் என்பதே எனது விருப்பம். அது நிறைவேறுமா என தெரியாது.
எஸ்.அஸ்பின், 8ஆம் வகுப்பு
பிறந்த நாளை பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்துதான் கொண்டாடுவேன். அடுத்தமுறை, உறவுகளுடன் எங்காவது பொது இடத்தில் வைத்துக் கொண்டாடும் ஆசையும் இருக்கு. கொண்டாட்டமாகப் பரிசுகள் கொடுத்தும், பெற்றும் அந்த நாளை மகிழ்ச்சியாக்கிக் கொள்ளவேண்டும் என்பதே ஆசை.
ஏ.முத்துக்குமார், 9ஆம் வகுப்பு

