பெங்களூரு தொட்ட பானஸ்வாடியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி பிரம்ம ரத உற்சவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.இந்த விழாவினை முன்னிட்டு இந்தப்பகுதியில் உள்ள பல கோவில்கள்,சங்கங்கள்,அமைப்புகள் சார்பில் 25 பிரம்மாண்டமான பூப்பல்லக்குகள் சாலைகளில் பவனிவந்தது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இந்த பூப்பல்லக்கு உற்சவத்தில் கலந்து கொள்ளும் அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள் தத்தம் கோவில் பூப்பல்லக்குதான் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நன்கு செலவு செய்து வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் பூப்பல்லக்கினை உருவாக்குவர்.
இப்படி உருவாக்கப்பட்ட பூப்பல்லக்குகள் நகரில் நேற்று காலை முதல் இரவு வரை வலம் வந்தன,இவற்றைக் காணவும் பூப்பல்லக்கில் இருந்து அருள்பாலித்த சுவாமி,அம்மனை தரிசிக்கவும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.
பருந்து,ரதம்,அரண்மனை,கோவில்,அன்னம்,குதிரை,போன்ற வடிவங்களில் உருவாக்கப்பட்டிருந்த பூப்பல்லக்குகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.இப்படி எல்லாம் கூட பூப்பல்லக்கினை உருவாக்கமுடியுமா? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.ஒவ்வொரு பல்லக்கிலும் பயன்படுத்தப்பட்ட பூக்கள் 500 கிலோ எடை கொண்டதாகும்
படங்கள்:பிரபு,பெங்களூரு..