PUBLISHED ON : டிச 12, 2019 12:00 AM

நினைத்தாலே முக்தி தரும் இடமான திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்திற்கு வரும் கூட்டத்தை நினைத்தாலே கொஞ்சம் பக் என்றுதான் இருக்கும், இந்த கூட்டத்திற்குள் நல்லபடியாக போய்விட்டு திரும்பவேண்டுமே என்று ஒரு பக்கம் கவலை இருந்தாலும் அண்ணாமலையாரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்று தைரியமும் இருந்தது.




எங்கே பார்த்தாலும் பக்தர்கள் என்று சொல்லும்படியாக நெருக்கியடித்துக் கொண்டு பக்தர்கள் கிரிவல வீதியில் நடந்துசென்றனர்.இளைஞர்கள் கூட்டம் நிறைய காணப்பட்டது ஆனால் அவர்களிடம் விளையாட்டுத்தனம் அதிகமாக இருந்தது திடீரென குறுக்கே குறுக்கே ஒடுவதும் பீப்பி போன்ற கருவியை வைத்துக் கொண்டு அதிக சப்தம் எழுப்புவதும் அமைதியாக செல்லும் பக்தர்களுக்கு இடையூறாகவே இருந்தது.
வழியெங்கும் பலவிதமான பொருட்களை கூவிக்கூவி விற்கின்றனர் அரைஞான் கயிறு மூன்று பத்து ரூபாய் என்று நுாறு அடிக்கு ஒருவர் விற்றுக்கொண்டு இருக்கிறார் விற்பனையில் சுக்கு காபியும் கரும்புச்சாறும் சக்கை போடுபோட்டது.
வழியில் உள்ள லிங்கங்களை தரிசித்தபடி 14 கிலோமீட்டர் துார கிரிவலப் பாதையை நடந்து முடிக்க நான்கு மணி நேரமானது அவரவர் நடை வேகத்தைப் பொறுத்த இந்த நேரம் கூடலாம் குறையலாம் ஆனால் மலையில் எரியும் மகாதீபத்தை பார்த்தபடி கிரிவலம் வருவது என்பது ஒரு அலாதியான அனுபவம்தான்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
