PUBLISHED ON : ஜன 15, 2020 12:00 AM
.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் முழுமூச்சில் நடந்துவருகிறது.


மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்களில் நடத்தப்படும் சல்லிக்கட்டு மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது.வருகின்ற 15ம் தேதி அவனியாபுரத்திலும்,16ம் தேதி பாலமேட்டிலும்,17 ம்தேதி அலங்கநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடாகியுள்ளது.
இதே போல திருச்சி மாவட்டத்தில் சூரியூர், ஆவரங்காடு, பொத்தமேட்டுப்பட்டி மற்றும் கருங்குளம் ஆகிய 4 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.


சிராவயல் போன்ற இடங்களில் வாடி வாசல் வழியாக இல்லாமல் பொதுவாக மொத்தமாக மாடுகள் அவிழ்த்துவிடப்படும் ஆங்காங்கே வீரர்கள் மாடுகளை மடக்கிபிடித்துக் கொண்டிருப்பர்.
ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்திற்கு பிறகு நடக்கும் ஜல்லிக்கட்டில் அனைவரின் கவனமும் விழுந்துள்ளது அரசின் ஆதரவும் பெருகியுள்ளது இதன் காரணமாக மாடு பிடிக்கும் வீரர்களுக்கு கடந்த காலத்தில் கட்டில் பீரோ போன்றவைதான் அதிகபட்ச பரிசாக கிடைத்துவந்தது ஆனால் கடந்த வருடம் கார் போன்ற பரிசுப்பொருட்கள் எல்லாம் கிடைத்தது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சென்னை நகர மக்களுக்கு கிராமிய ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீங்கினாலும் ஆண்டுதோறும் அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து அரசிதழில் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை 16 ம்தேதி துவங்கி 31 ந்தேதிக்குள் நடத்திமுடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் 500 முதல் 900 காளைகள் வரை பங்கேற்கும் அலங்கநல்லுார்தான் அதிகபட்ச காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டாகும்.மருத்துவ சோதனைக்கு பிறகே ஜல்லிக்கட்டு காளைகள் அனுமதிக்கப்படுகிறது அதே போல மாடுபிடி வீரர்களும் சட்ட திட்டத்திற்கு உள்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த வருடம் பரவலாக மழை பெய்து பூமி செழித்திருப்பதாலும்,பொங்கல் பணம் பரிசு போய்ச் சேர்ந்து இருப்பதாலும், பிறந்த ஊர் பாசத்துடன் மக்கள் கிராமங்களுக்கு சென்று இருப்பதாலும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் அடங்காத காளைகளாலும், அடக்கப்போகும் ‛காளைகளாலும்' விழா களைகட்டப்போவது உறுதி.
படங்கள்:சாத்துார் அந்தோணி.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in
