PUBLISHED ON : நவ 24, 2025 05:18 PM

நாடகத்தில் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தையும்,துல்லியத்தையும் கொண்டு வருவதற்கு பெரிதும் முயற்சி எடுத்துக் கொள்பவர் எஸ்.பி.எஸ்.ராமன்.
இதற்காகவே தனது ஒவ்வொரு நாடகத்திற்கும் இடையே நல்ல இடைவெளி எடுத்துக் கொண்டு உருவாக்குபவர் அல்ல அல்ல செதுக்குபவர்
இவரது இயக்கம் தயாரிப்பில், நேற்று சென்னை நாராதகானசபாவில் மேடையேறியதுதான் கிருஷ்ணா நாடகம்.
மேடையிலேயே படகில் கிருஷ்ணர் வருவது, சக்ராயுதத்தின் விஸ்வரூபம், “யுத்தம் யுத்தம் இது யுத்தமே!” என்ற பாடல் மூலம் மகாபாரதத்தின் சாரம்சத்தை தத்ரூபமாக காட்டியது என அனைத்தும் கண்களையும் கருத்தையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
. “கிருஷ்ணா! உனது போராட்டம் தருமருக்காகத்தானே?” — “இல்லை... தர்மத்திற்காக! ஜெயிக்கப்போவது வில் அல்ல என் சொல்!”—ஒவ்வொரு காட்சியும் முடிவில் நச் சென வந்துவிழும் வசனங்கள் பார்வையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்தன.வசனகர்தா விவேக் பாரதிக்கு வாழ்த்துக்கள்
கிருஷ்ணரின் வரலாறும் மகாபாரதமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதால், இந்த நாடகமும் போரின் பெருமை, வேதனை, உண்மை ஆகியவற்றை உணர்ச்சியோடு சொல்கிறது.
சண்டைக் காட்சிகள் உண்மைக்கு நெருக்கத்தில் நிற்கின்றன; கிருஷ்ணரும் திரௌபதியும் சிலம்பம் சுழற்றி மேடையை உயிர்ப்பிக்கின்றனர். இளமை, அழகு, குறும்பு ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்படும் கிருஷ்ணருக்கும் மூப்பு உள்ளது, இறப்பும் உள்ளது—அதை மிக ஆழமாக, உள்ளம் தொடும்படி இந்த நாடகம் சொல்கிறது. அது என்ன?—அதை இங்கே சொல்லிவிட முடியாது; காரணம் அதுதான் நாடகத்தின் முதன்மை கரு.
நேற்று பலத்த கைதட்டலுடன் நடந்த இந்த நாடகத்தை “அடடா… காண தவறி விட்டோமே!” என்று எண்ணுபவர்கள் கவலைப்பட வேண்டாம்—வரும் 27ம் தேதி சென்னை மயிலாப்பூர் ஆர்ஆர் சபாவில் மீண்டும் மேடையேற உள்ளது.கூடுதல் விவரங்களுக்கு: எஸ்.பி.எஸ். ராமன் | +91 98400 45608 | மின்னஞ்சல்: raman.sbs@gmail.com
-எல்.முருகராஜ்

