PUBLISHED ON : ஜன 18, 2022 12:00 AM

சந்து பொந்துக்கள் வெறும் ஐயாயிரம் சதுர அடிக்குள் அடைந்து கிடந்த காசி விசுவநாதர் இன்று மூன்று லட்டச்சதிற்கும் மேற்பட்ட சதுரஅடியில் உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.



அழுக்கடைந்த ரயில் நிலையம்,இருளடைந்த படித்துறைகள்,நெரிசலான சந்துக்கள்,அடிக்கடி நேரும் மின்வெட்டு என்று எல்லா பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
எங்கள் காசிக்கு நல்லது நடக்கும் என்றால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத்தயார் என்று காசி விசுவநாதர் கோயிலைச் சுற்றி பல ஆண்டுகாலம் குடியிந்தவர்கள் தங்கள் வீடுகளை விட்டுக் கொடுத்ததால் கோயில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விஸ்தீரணம் பெற்றுள்ளது.
நமது சக்திக்கு ஏற்ப தங்கும் விடுதிகள் ரகம் ரகமாக உள்ளது இரவிலும் படித்துறையில் நடந்தும் படகிலும் உலா வரலாம் மற்ற மாநில மக்கள் தங்குவதற்காக குறைந்த செலவிலான மடங்கள் அவர்களுக்கான உணவுகள் என்று காசி பிரமாதமாக இருக்கிறது.
அதிலும் அங்குள்ள அனுமன் காட் எனப்படும் பகுதி சென்னை மாம்பலம் போல தமிழர்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.பல தலைமுறைக்கு முன்பாக இங்கு குடிவந்தவர்கள் இங்குள்ள மடங்களில் உள்ள தெய்வங்களுக்கு பூஜைகளையும்,பொதுமக்களுக்கு வைதீக காரியங்களையும் செய்து உதவி வருகின்றனர்
கொஞ்சம் கூடுதலாக காசி பற்றி தெரிந்து கொண்டால் உடனே கிளம்பிவிடுவீர்கள்
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இந்நகரம் கிமு 1800 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.
முக்தி தரும் நகரங்கள் ஏழு என்று கருட புராணம் சொல்கிறது. வாரணாசி, அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி, துவாரகை என்பவையாம்.
வருணா(வருணை) ஆறும், அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடிவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. இதில் வாரணாசி என்கிற காசி மிகவும் சிறப்பு வாழந்த புண்ணிய பூமியாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு சமயம் பார்வதி தேவி எவ்வளவு நாட்கள்தான் தகப்பனார் இடத்திலேயே இருப்பது, நமக்கென்று ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்லலாம் என்று கூற, சிவபெருமானும் உமையவளுடன் காசிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது. இருவரும் மலையை விட்டு இறங்கி வந்து காசி என்ற ''ஸித்த'' க்ஷேத்திரத்தில் குடி கொண்டனர். பிரளய காலத்திலும் இந்த க்ஷேத்திரம் அழியாது என்று இறைவனே சொல்கிறார்.
காசி விசுவ நாதர் ஆலயத்தில் அமைந்துள்ள லிங்கமானது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். காசியில் மரணம் சம்பவித்தால், பகவான் சங்கரனே அவர்கள் காதில் ராம எனும் தாரக மந்திரத்தைச் சொல்லி, ஜீவனை கடைத்தேற்றுகிறார் என்பது ஐதீகம். எனவே நம் முன்னோர்களில் பலர் காசிக்குப் போனால் திரும்பி வராமல் அங்கேயே இருந்து முக்தி அடைந்திருக்கின்றனர். காசியில் உள்ள மணிகர்ணிகாவில்தான் இரண்டாவது சக்தி பீடம் அமைந்துள்ளது. தேவி பெயரே விசாலாட்சி. இங்குள்ள பைரவரே காலபைரவர். இன்னும் சில சிறப்புகள் காசிக்கு உண்டு.
.ஆதிசங்கரர் வாரணாசியில் சிவ வழிபாட்டை நிலைநாட்டினார். காசி காண்டத்தில் காசி விஸ்வநாதர் கோவில் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. பல முறை இந்த கோவிலை அழிக்க முயற்சி செய்தும் காசி விசுவநாதர் கோவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வீறு கொண்டு எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காசிக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம் கங்கை என்று சொன்னால் அது மிகையில்லை.
தினமும் சூரியன் மறைவுக்குப்பின் கங்கைக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர்.கங்கையில் குளித்து கங்கா ஆரத்தி பார்த்து காசி விசுவநாதரை தரிசிப்பது என்பது வாழ்க்கையில் முக்கிய பகுதியாகும் அந்தப் பகுதி உங்களுக்கு விரைவில் சாத்தியமாக வாழ்த்துக்கள்.
-எல்.முருகராஜ்
