PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM

பெண் பேராற்றவள் மிக்கவள் சக்தி மிகக் கொண்டவள்
அவளால் முடியாதது எதுவும் இல்லை இன்னும் சொல்லப் போனால் ஆணால் முடியாததும் கூட அவளால் முடியும்.கல்வியில், தொழிலில், வேலையில் அவள் காட்டும் வேகமும்,விவேகமும், முனைப்பும் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றம் கொண்டுள்ளது.
தாயாய், சகோதரியாய், மணைவியாய், தோழியாய் அவள் காட்டும் அன்பும் பாசமும் அளவிட முடியாதது அவளது மனவலிமைக்கு அவளே நிகரானவள்.
ஆனாலும் அவளுக்குண்டான உரிமைகளுக்காகவும், மரியாதைக்காகவும், தேவைகளுக்காகவும் இன்னமும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறாள்.ஜெயித்தாலும் சுயமாக ஒரு மக்கள் பிரதிநிதியாய் ஜொலிக்கமுடியவில்லை, விடமாட்டேன் என்கிறார்கள் அந்தத் தடைகளை உடைத்து எனக்கும் விவரம் தெரியும் என்று வீரியமாக பொங்கிஎழ வேண்டும்.
காலேஜா? மேரேஜா? என்ற சிக்கல் வரும் போதெல்லாம் காலேஜ்தான் என்று தைரியமான முடிவு எடுக்க வேண்டும்.
காரணம் கல்வி ஒன்றுதான் உங்கள் கனவுகளை நனவாக்கும், வறுமையை போக்கும், சிரமங்களை உடைக்கும், வளமான வாழ்க்கையை தீர்மானிக்கும்.
எவ்வளவோ தொழில்நுட்பங்கள் நாட்டிற்கு வந்துவிட்ட போதிலும், மெட்ரோ ஏஐ என்று நாடு வளர்ச்சி கண்டுவிட்ட போதிலும் பெண்கள் பலர் இப்போதும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பெரும் சிரமப்படுகின்றனர்.
பூ வாடக்கூடாது என்பதற்க்காக இவர்கள் வெயிலில் வாடுகின்றனர், மெல்லிய கரங்களில் கடப்பாரை ஏந்துகின்றனர், செங்கல் சூளைகளில் நெருப்பில் காய்கின்றனர், சம்மட்டி அடிக்கின்றனர், தங்களது குடும்ப சுமையை குறைக்க பெரும் சுமையை சுமக்கின்றனர்.
இவர்களது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குறியே, இவர்களது வாழ்க்கை மலர்ச்சி பெறவேண்டும், வளர்ச்சி காணவேண்டும் அதற்கு எல்லோரும் இன்றைய சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

