/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
வரலாறு தெரியாத தி.மு.க., சட்டப்புலிகள் !
/
வரலாறு தெரியாத தி.மு.க., சட்டப்புலிகள் !
PUBLISHED ON : டிச 14, 2025 04:24 AM

'நீதிபதி சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினராக இருந்தவர்; அதனால், அவர் நீதிபதியாக இருக்க தகுதி இல்லாதவர்' என்று, தி.மு.க.,வில் உள்ள சட்டப்புலிகள் உறுமுகின்றன. அதில், ஒரு முக்கிய புலி, அரசியல் சட்டப் புத்தகத்தை கிழித்து கரைத்து குடித்த மாமேதை, '2ஜி' ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா.
வரலாறும் தெரியாது; நடைமுறையும் புரியாது. அதனால் தான் இப்படி பேசி, கேலி கிண்டலுக்கு ஆளாகின்றனர் உடன்பிறப்புகள்.
ஆர்.எஸ்.எஸ்., ஒரு அரசியல் கட்சியல்ல; சமூக சேவை அமைப்பு. அதில் உறுப்பினராக இருந்தால் தேசப்பற்றும், சேவை உணர்வும் அதிகரிக்குமே தவிர, யார் மீதும், எந்த சித்தாந்தம் மீதும் வெறுப்போ, வன்மமோ ஏற்படாது. அரசியல் கட்சியில் தீவிரமாக பணியாற்றி இருந்தால் கூட, நீதிபதி பதவிக்கு வருவதற்கு அது ஒரு தடை கிடையாது.
பறித்துவிட முடியாது
மிக சமீபத்தில் கூட உச்ச நீதிமன்றம் இந்த உண்மையை ஊர்ஜிதம் செய்திருக்கிறது. பா.ஜ., கட்சியின் மகிளா பிரிவு செயல ராக இருந்த விக்டோரியா கவுரி, சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதை எதிர்த்து வழக்கு போட்டனர். 'அரசியல் கட்சியில் இருந்தார் என்பதால், ஒருவர் நீதிபதி ஆவதற்கான தகுதியை பறித்துவிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதில் என்ன வேடிக்கை எனில், கவுரியின் பதவியேற்பை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று பகீரத முயற்சி எடுத்த மனுதாரர்களே இந்த உண்மையை ஒப்புக் கொண்டனர்.
'கவுரி, பா.ஜ.,வில் முக்கிய நிர்வாகியாக இருந்தார் என்பதற்காக, அவரது நியமனத்தை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. சிறுபான்மையினர் குறித்து அவர் தரக்குறைவாக கருத்து வெளியிட்டார் என்பதால் தான் எதிர்க்கிறோம்' என்று வாதம் செய்தனர், அந்த உண்மையான சட்ட நிபுணர்கள்.
நியமனத்துக்கான பரிந்துரையில் இருந்து பதவியேற்பு வரை மின்னல் வேகத்தில் காட்சிகள் மாறியதில், உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கான சந்தர்ப்பமே வாய்க்கவில்லை என்பது வேறு கதை.
அரசியல் கட்சிகளில் தீவிர பங்காற்றியவர்கள் பிற்பாடு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றி இருக்கின்றனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. சட்டமும், வரலாறும் நிஜமாகவே படித்திருந்தால் இது தெரியும்.
வசூல்ராஜா பாணியில் ஆள் மாறாட்டம் செய்து, வக்கீல் பட்டம் வாங்கி, ஊழலில் திளைக்க, அதை முத்திரை மோதிரமாக பயன்படுத்தும் போலிகளுக்கு இது தெரியாமல் போவது இயல்பு தான்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே நாகரிகமான இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்திருக்கிறது; விடுதலைக்கு பின்னரும் தொடர்கிறது. 1935ல் காங்கிரசில் சேர்ந்த கே.எஸ். ஹெக்டே, 1952ல் காங்கிரஸ் எம்.பி.,யாக ராஜ்ய சபாவில் நுழைந்தார்; 1957ல் மைசூர் ஐகோர்ட்டின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்; எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, நீதிபதியாக பதவியேற்றார்.
நேர்மையும், உண்மையும்
கிருஷ்ணய்யரை விட பெரிய உதாரணம் என்ன இருக்கிறது? மெய்யாலுமே சட்டத்தை கரைத்து குடித்த அந்த மேதை, அரசியலில் குதித்து சுயேச்சையாக தேர்தலில் ஜெயித்து, முதலில் அன்றைய மெட்ராஸ் சட்டசபையிலும், கேரள சட்டசபையிலும் உறுப்பினரானார். நாட்டின் முதலாவது காங்கிரஸ் அல்லாத அரசில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் நம்பூதிரி பாட்.
கடந்த 1968ல் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணய்யர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறியவர் என்று சொல்லப்பட்ட கிருஷ்ணய்யர், ஒரு நீதிபதியால் சமூகத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களை உண்டாக்க முடியும் என்று நிரூபித்து காட்டினார். இன்று வரை சட்ட மாணவர்களின் கனவு நாயகன் அவர்.
சித்தாந்தமும், கொள்கையும் எப்படி இருந்தாலும் மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; செயல்களில் நேர்மையும், உண்மையும் இருக்கிறதா என்று தான் உற்று கவனிப்பர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜி.எல்.ஓசா, பக்கா சோஷலிசவாதி; சோஷலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மத்திய பிரதேச சட்டசபைக்கு போட்டியிட்டு தோற்றவர். நீதிபதி பி.ஆர்.கவாய், இந்திய குடியரசு கட்சியின் நிறுவனர் ஆர்.எஸ்.கவாயின் மகன், சிறுவயது முதலே கட்சிப்பணி செய்தவர்.
அவ்வளவு துாரம் போவானேன்... சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி.எம்.வேலுமணி, அ.தி.மு.க., மகளிர் அணி நிர்வாகியாக இருந்தவர் தான். அவரை நீதிபதியாக நியமிக்கும்போது, உளவுத்துறை ஆட்சேபம் தெரிவித்து, 'அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்' என்று சுட்டிக்காட்டியது.
விமர்சனம் செய்யவில்லை
இதையறிந்த ஜெயலலிதா, 'அந்த பதவியில் இருந்து வேலுமணி ராஜினாமா செய்துவிட்டார்' என்று அறிவிப்பாக வெளியிட்டார். அதன்பின் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
உண்மையில் நீதித் துறைக்கு அதிக ஆட்களை 'வழங்கியதும்' அதை ஒரு வழக்கமாக தமிழகத்தில் அறிமுகம் செய்ததும் தி.மு.க., தான். குறிப்பிட்டு சொல்வதென்றால், அதன் மறைந்த தலைவர் கருணாநிதி தான்.
பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் தி.மு.க., செயலராக இருந்த ரத்தினவேல் பாண்டியனை, சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக, உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தியதில் கருணாநிதியின் பங்களிப்பு நாடறிந்த ரகசியம். அப்போது துவங்கிய அரசியல் சாயம் கொண்ட நியமன பரிந்துரைகள், ஐக்கிய முன்னணி அரசில் கூட்டாளியாக அக்கட்சி இருந்த காலம் வரையில் தொடர்ந்தது.
நியமனம் பெற்ற நீதிபதிகள், சென்னை கோபாலபுரத்துக்கு வந்து மாலையும், பொன்னாடையும் அணிவித்து ஆசி பெற்று சென்ற நிகழ்வுகள் அனைத்தும் ஊடக வெளிச்சத்தில் நடந்தவை தான்.
அவ்வாறு சென்றவர்கள் எவரையும், யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஏனெனில், சட்டக் கல்லுாரியில் படித்த எவரும் அரசியல் சார்போ, தொடர்போ இல்லாதவர்களாக இருக்க முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். வகிக்கும் பதவிக்கு களங்கம் வராமல் செயல்படுகின்றனரா என்பது தான் முக்கியம்.
சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினராக இருந்தாரா? பட்டையாக திருநீறு இட்டு நீதிமன்றத்திற்கு வருகிறாரா? தீர்ப்பு எழுத துவங்கும்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறாரா? அனைத்து கேள்விகளுக்கும், 'ஆமாம்' என்று பதில் வருகிறதா? வந்தால் என்ன போச்சு? தீர்ப்பில் தவறு இருக்கிறதா... அதை கவனியுங்கள்; இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யுங்கள்!
நெற்றியில் திருநீறும், திருமண்ணும் இல்லாத நீதிபதிகளின் தீர்ப்புகளை எதிர்த்தும், மேல்முறையீடு மனுக்கள் தாக்கலாகவில்லையா?
நன்றிக்கடன்
வலதுசாரிகள், ஹிந்துக்கள், பக்தர்கள் என்றாலே பதறியபடி பேட்டி அளிக்கிற ஹரி பரந்தாமன், சந்துரு போன்ற முன்னாள் நீதிபதிகள் பாரபட்சத்துடன் தான் தீர்ப்புகள் வழங்கினரா? ஓய்வுபெற்ற பின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் இந்த கனவான்கள் வாசித்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மனுவுடன் அணிவகுத்து வந்தால், நீதிமன்றங்களில் என்ன நிலை ஏற்படும்?
அரசியல் சாசன பாதுகாப்பு கொண்ட நீதிபதி பதவியில் இருந்து மரியாதை, செல்வாக்கு, பாதுகாப்பு வசதிகளை அனுபவித்த பின், ஓய்வுக் காலத்தை ஒதுங்கியிருந்து கழிப்பது தான், அந்த பதவிக்கும், அதை வழங்கிய சமூகத்திற்கும் ஆற்றக்கூடிய நன்றிக்கடன் என்பது இவர்களுக்கு உறைக்காது.
எல்லாவற்றுக்கும் மேலானவன் இறைவன். எவர் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கடைசி புகலிடம் கடவுள். அந்த சுவாமியையே நம்பாதவர்கள், சுவாமிநாதனை சந்தேகிப்பதில் வியப்பேதும் கிடையாது. காலி டப்பாக்கள் காற்றில் உருண்டு கொண்டு தான் இருக்கும்.

