/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
கூட்டுறவு இயக்கத்தின் உலகளாவிய தலைமையகமாக உருவெடுக்கும் இந்தியா
/
கூட்டுறவு இயக்கத்தின் உலகளாவிய தலைமையகமாக உருவெடுக்கும் இந்தியா
கூட்டுறவு இயக்கத்தின் உலகளாவிய தலைமையகமாக உருவெடுக்கும் இந்தியா
கூட்டுறவு இயக்கத்தின் உலகளாவிய தலைமையகமாக உருவெடுக்கும் இந்தியா
PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

கூ ட்டுறவு துறை பொருளாதார ரீதியாக தனி நபர்களை வளப்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதாரத்தின் பிரதான நீரோட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. சொற்ப அளவு சேமிப்பை மட்டுமே கொண்டுள்ள மக்களை மேம்படுத்துவதற்கான சிறந்த கருவியாகவும் கூட்டுறவு இயக்கம் உள்ளது. நம் நாடு கூட்டுறவு தொடர்பாக விரிவான வரலாற்றை கொண்டுள்ளது.
ஆனாலும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் தான், கூட்டுறவு இயக்கம் அதிக ஆற்றலுடனும், வலிமையுடனும் புத்துயிர் பெற்றுள்ளது. 2021-ல் மோடி தலைமையின் கீழ், தேசிய அளவில் கூட்டுறவுக்கு என, பிரத்யேக அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
சாதனை
கூட்டுறவு துறையில் வாய்ப்புகளுக்கான அனைத்து கதவுகளையும் திறக்கும் முக்கிய முடிவாக இது அமைந்தது.
மூன்று ஆண்டுகளில், இந்த துறையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கூட்டுறவு துறையிலும், உலகுக்கு வழிகாட்டும் நண்பராக, 'விஸ்வாமித்ரா'வாக இந்தியா உருவெடுக்க வழிவகுத்துள்ளன.
நம் நாட்டின் கூட்டுறவு இயக்கம் இப்போது வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல் சாதனையை எட்ட தயாராக உள்ளது.
இன்று முதல், 30ம் தேதி வரை டில்லியில், சர்வதேச கூட்டுறவு கூட்டணியான ஐ.சி.ஏ.,யின் பொதுச் சபை கூட்டத்தையும், உலகளாவிய கூட்டுறவு மாநாட்டையும் மத்திய அரசு நடத்த உள்ளது.
ஐ.சி.ஏ.,யின், 130 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, இந்தியா அதன் அமைப்பாளராக செயல்பட உள்ளது. இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், சர்வதேச கூட்டுறவு ஆண்டாக, 2025-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில், இது நடைபெறுகிறது.
ஐ.சி.ஏ.,யின் பொதுச் சபை கூட்டத்தையும், உலகளாவிய மாநாட்டையும் நம் நாடு நடத்துவது, கூட்டுறவு இயக்கத்தில் நம் தேசத்தின் தலைமைக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரமாகும்.
கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தாமல், சமூகத்தின் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவது சாத்தியமற்றது என, மத்திய அரசு நம்புகிறது.
அதனால் தான், நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், கூட்டுறவு சங்கங்கள் இடையே வெளிப்படை தன்மையையும், போட்டி தன்மையையும் வளர்க்க, விரிவான நிர்வாக, கொள்கை, சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடியின் தாரக மந்திரமான, 'சஹ்கர் சே சம்ரித்தி' எனப்படும் கூட்டுறவின் மூலம் வளம் என்பது, நாட்டின் கூட்டுறவு நிறுவனங்களை தற்சார்புடையதாகவும், வலுவானதாகவும் மாற்றும் நோக்கத்தை கொண்டுள்ளது.
கூட்டுறவு கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் வாயிலாக, ஒரு புதிய பொருளாதார மாதிரி வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இது, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்த முன்மாதிரி, நம் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வது மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் கட்டமைப்பாகவும் செயல்படும்.
ஒரு வளமான தேசத்தை உருவாக்க, பொருளாதார வளர்ச்சியின் அனைத்து குறியீடுகளிலும் உயர்வது அவசியம். அது மட்டுமல்லாமல், 140 கோடி மக்களின் செழிப்பை உறுதி செய்வதும், அனைத்து தனிநபர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வதும் அவசியமாகும்.
இது, கூட்டுறவால் மட்டுமே சாத்தியமாகும். இந்தக் கருத்தை நிரூபிக்க, நம் வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.
உதாரணமாக, ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி, கடந்த நுாற்றாண்டில் 100 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளது. அத்துடன், 6,500 கோடி ரூபாய்க்கு மேல் வைப்பு தொகையையும் கொண்டுள்ளது.
கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிகரமான உதாரணமாக அமுல் திகழ்கிறது. தற்போது, இதன் வாயிலாக, 35 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பையும், கவுரவமான வாழ்க்கையையும் பெற்று வருகின்றன. இந்தக் குடும்பங்களில் உள்ள பெண்கள், இதில் முக்கிய பங்காற்றி, முன்னணியில் இருந்து வழி நடத்தி வருகின்றனர்.
இதன் விளைவாக இன்று, அமுல் நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம், 80,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில், முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்தப் பெண்கள் யாரும் துவக்கத்தில், 100 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யவில்லை.
நம் நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கவும், வலுப்படுத்தவும், 60-க்கும் மேற்பட்ட முயற்சிகளை மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக புறக்கணிப்பையும், நிர்வாக முறைகேடுகளையும் எதிர்கொண்ட பெரும்பாலான தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், நிதி ரீதியாக பலவீனமாகவும், செயலற்றதாகவும் மாறிஉள்ளன.
நடவடிக்கை
இதை சரி செய்ய, தொடக்க வேளாண் கடன் சங்கத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அவற்றை பொருளாதார ரீதியாக வளமாக்கிஉள்ளது, மத்திய அரசு.
புதிய துணை விதிகளை ஏற்றுக்கொள்வதன் வாயிலாக, தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் இப்போது பால், மீன்வளம், தானிய சேமிப்பு, மக்கள் மருந்தக மையங்களை நடத்துதல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
மூன்று புதிய தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டதன் வாயிலாக, கூட்டுறவு சூழல் அமைப்பு மேலும் மேம்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம், விவசாயிகளுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இயற்கை வேளாண் பொருட்களுக்கு சான்றளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இயற்கை வேளாண் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் வழங்குகிறது.
மேலும், கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்கு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்காக, ஒரு விரிவான தேசிய கூட்டுறவு கொள்கையும் உருவாக்கப்பட்டு வருகிறது.
டில்லியில் நடைபெறும், ஐ.சி.ஏ., பொதுச் சபை கூட்டமும், உலகளாவிய கூட்டுறவு மாநாடும், ஐ.நா.,-வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை கூட்டுறவு இயக்கத்தின் வாயிலாக அடைவதில், இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமையும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்த, நாம் தயாராகி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கூட்டுறவு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் போன்றவர்களுக்கு, நான் ஒரு வெளிப்படையான அழைப்பை விடுக்கிறேன்.
உலகளாவிய கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த கற்றல், பகிர்தல், இணைந்து செயல்படுதல் என்ற உணர்வுகளுடன் நாம் செயலாற்றுவோம்.
'கூட்டுறவின் மூலம் வளம்' என்ற இந்தியாவின் கொள்கை, ஒரு தொலைநோக்கு பார்வை மட்டுமல்ல; கூட்டுச் செழிப்பு, நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சிறந்த உறுதிமொழியாகும்.
அமித் ஷா
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர்