/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
சத்தமின்றி மாறிய நிதிஷ் குமாரின் விதி!
/
சத்தமின்றி மாறிய நிதிஷ் குமாரின் விதி!
PUBLISHED ON : மார் 25, 2026 06:28 AM

ராஜ்தீப் சர்தேசாய்,
மூத்த பத்திரிகையாளர்,
எழுத்தாளர்
rajdeepsardesai52@gmail.com
'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பர். ஆனால், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் விஷயத்தில், 'அரசியல் பிழைத்தோர்க்கு கூட்டணி கூற்றாகும்' என்றாகிவிட்டது. 'அரசியல் சாசன மதிப்புகள் மீது நம்பிக்கை கொண்ட வாஜ்பாயியின் பா.ஜ.,வுடன் தான் கூட்டணி வைத்தேன். ஹிந்து - முஸ்லிம் இடையே மதரீதியான பிளவுகளை துாண்டி, அதில் வெற்றி பெற நினைக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.,வுடன் கைகோர்க்க மாட்டேன்' - - இது, பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்காக, 2013 ஜூனில், நிதிஷ் குமார் கூறிய காரணம்.
அதே நிதிஷ் குமார், இந்த மாதத்தின் துவக்கத்தில் என்ன சொன்னார்...
மோடி அலை
'பார்லி.,யில் உள்ள லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்பது தான் என் விருப்பம். அரசியல் பயணத்தை துவங்கியபோதே எனக்குள் அந்த ஆசை எழுந்தது' என கூறி இருக்கிறார்.
மாநில அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தேசிய அரசியலில், அதுவும் ராஜ்யசபா எம்.பி.,யாக செல்ல முடிவெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு தான் மேற்கூறிய பதிலை அவர் அளித்தார்.
இந்திய அரசியலில், ஒரு காலத்தில் பிரதமர் மோடிக்கு போட்டியாக பேசப்பட்டவர் நிதிஷ் குமார். அவரே, தற்போது மோடி அலைக்கு முன் மவுனமாக சரணடைந்து, ராஜ்யசபா எனும் முதியோர் இல்லத்துக்கு தற்போது செல்லவுள்ளார்.
மென்மையான பொறியாளராக இருந்த நிதிஷ் குமார், 2005ம் ஆண்டு, பீஹார் மாநில அரசியலை தன் கையில் எடுத்தார். அடுத்த 20 ஆண்டுகளில், சீரழிவு சின்னம் என்ற பீஹாரின் முகவரியையே மாற்றினார்.
அதற்காக அரசியலில் அவர் செய்த, 'ஜிம்னாஸ்டிக்' வித்தைகள் ஏராளம். எத்தனை முறை கூட்டணி மாறினாலும், முதல்வர் நாற்காலி என்ற அதிகாரத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் வித்தைக்காரராக திகழ்ந்தார்.
தற்போது ஏற்பட்டு இருக்கும் திருப்பம், அந்த வியக்கத்தக்க வித்தைகளுக்கு எல்லாம் முடிவுரையை எழுத துவங்கிவிட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக பீஹார் அரசியலில் கோலோச்சி வந்த நிதிஷ் குமார், ராஜ்யசபாவை நோக்கி தள்ளப்பட்டிருக்கும் விதம், சத்தம் இல்லாத, மவுனமான வெளியேற்றமாக அமைந்து இருக்கிறது.
அதற்கும் மேலாக, பிரதமர் மோடியின் காலத்தில், ஆளும் கூட்டணிக்குள், அதிகார சமநிலை எவ்வளவு தீர்க்கமாக மாறி இருக்கிறது என்பதையும் இந்த விவகாரம் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
பா.ஜ.,வால் பீஹார் மாநிலத்தை தன் சொந்த முயற்சியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மண்டலமயமாக்கப்பட்ட அரசியல் சூழலில், பா.ஜ.,வால் தன் உயர் ஜாதி பிம்பத்தை உதறி தள்ள முடியாததே இதற்கு காரணமாக இருந்தது.
பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் பிம்பமாக தன்னை முன்னிலைப்படுத்திய நிதிஷ் குமார், அந்த ஜாதியினரின் சொத்தாகவே மாறி இருந்தார்.
அதே சமயம், ஒரு பிராந்திய தலைவராக, மாநிலத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக செயல்பட்டார்.
கால மாற்றத்தில் அரசியல் கணக்குகள் எல்லாம் தலைகீழாக மாற துவங்கின. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின், 'ஜூனியர்' கூட்டாளியாக இருந்த பா.ஜ., தற்போது, கூட்டணியிலேயே பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்து நிற்கிறது.
கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தல் பா.ஜ.,வுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கூட்டணிக்குள் இடம் கொடுத்த பிரதான கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை விட, பா.ஜ., அதிக தொகுதிகளை கைப்பற்றியது. இருந்தாலும், முதல்வர் நாற்காலியில் நிதிஷ் குமாரே அமரவைக்கப்பட்டார்.
பா.ஜ., தலைமையை பொறுத்தவரை நீண்டகால இலக்கு என்பது, மிகத் தெளிவானது. பீஹாரில் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பது தான் அந்த இலக்கு. அதே சமயம், நிதிஷ் குமாரை ஒதுக்கினால், மாநிலத்தில் கட்சி வளராது என்பதையும் பா.ஜ., புரிந்து கொண்டது.
கடந்தாண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்கு நிதிஷ் குமாரின் தயவு பா.ஜ.,வுக்கு அவசியம் தேவைப்பட்டது. ஏனெனில், மிகவும் பின்தங்கிய ஜாதியினர், பெண்களின் ஆதரவை, அவர் தன்வசம் வைத்திருந்தார்.
கடந்த 2015ல் நிதிஷ் குமார், தன் ஆரம்பகால, 'மண்டல்' இயக்க தோழரான லாலுவுடன் கைகோர்த்திருந்த நேரத்தில், தேர்தல் அரசியலில் இருந்து பா.ஜ., வெகுவாக ஓரங்கட்டப்பட்டிருந்தது.
அதனால், 2025 நவம்பர் சட்டசபை தேர்தல் வரை நிதிஷ் குமார் விவகாரத்தில், பா.ஜ., பெரிதாக எந்த, 'ரிஸ்க்'கையும் எடுக்கவில்லை. தேர்தல் முடிந்து, முடிவுகள் பா.ஜ.,வுக்கு சாதகமாக மாறியதால், தற்போது நிதிஷ் குமாரை மிக நாகரிகமாக ராஜ்யசபாவுக்குள் தள்ளிவிட்டு, அதே சமயம் மாநில அரசியலில் விளிம்பு நிலைக்கு அவரை, மிக கண்ணியமாக கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது.
நாடகம்
இதன் மூலம், ஒரே சமயத்தில் இரு இலக்குகளை, பா.ஜ., அடைந்து இருக்கிறது. முதலாவதாக குழப்பமான வெளியேற்ற நாடகத்தை தவிர்த்தபடி, பீஹாரின் அதிகார மையத்தை ஆளும் வழியை பா.ஜ., உருவாக்கி இருக்கிறது; இரண்டாவது, மிக மென்மையான அரசியல் கவிழ்ப்பு.
அரசியலில் இப்படியான உத்திகள் ஒன்றும் புதிதல்ல. அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும் தலைவர்களுக்கு, கவர்னர் பதவி, பார்லி., பொறுப்புகள் அல்லது ஆலோசகர் வேலை கொடுத்து கண்ணியமாக வெளியேற்றும் வழிகள் காட்டப்படுகின்றன.
ஆனால், பீஹார் நிகழ்வு பரந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் தலைமையில் பா.ஜ., செயல்படும் விதத்தை, இது அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
இன்று அந்தக் கட்சி, ஒரு சக்திவாய்ந்த தேசிய தலைமையின் கீழ் இயங்கும் ஒரு தேர்தல் இயந்திரமாக செயல்படுகிறது. அவசியமான தருணங்களில், மாநில கூட்டாளிகள் வரவேற்கப்படுகின்றனர். ஆனால், அதிகாரம் என வந்துவிட்டால், அவர்கள் நிரந்தர பங்குதாரர்களாக கருதப்படுவது, மிக அரிதாகவே இருக்கிறது.
அசாமில் உள்ள அசாம் கண பரிஷத் முதல், மஹாராஷ்டிராவில் சிவசேனா, கோவாவில் மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி வரை, மாநில கட்சிகளை தன் சொந்த வளர்ச்சிக்காக பயன்படுத்திய பா.ஜ., அதன்பின் அக்கட்சிகளை ஓரங்கட்டியது.
பீஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், அந்த பட்டியலில் தான் வருகிறது. அரியணை போட்டியில், பா.ஜ.,வை மிஞ்சிவிட முடியும் என, நிதிஷ் குமார் கணக்கு போட்டு வைத்திருந்தார். அதனால், அவ்வப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வருவதும் போவதுமாக அவர் இருந்தார்.
அரசியலில் பிழைக்க தெரிந்தவர் என்பது போல, நிதிஷ் குமாரின் ஒவ்வொரு நகர்வும் இருந்தது. ஆனால், அதற்காக அவர் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருந்தது. அதிகாரம் மற்றும் பதவிக்காக அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டே இருந்ததால், பல முனைகளிலும் அவர் மீதான நம்பிக்கை படிப்படியாக சிதைந்தது.
நிதிஷ் தலைமையில், 2025 சட்டசபை தேர்தலை சந்தித்த பா.ஜ., வெற்றிக்கு பின், உடல்நலம் குன்றிய ஒரு வயதான தலைவரின் தயவு இனி தங்களுக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவே தெரிகிறது.
பாதுகாப்பு
ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு, பா.ஜ.,வின் இந்த அரசியல் நகர்வு என்ன செய்தியை உணர்த்தப் போகிறது என்பதே தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி முதல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகத்தின் அ.தி.மு.க., வரை பல வலுவான கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கூட்டணி கட்சிகளின் இழப்பில் வளர்வதே பா.ஜ.,வின் நீண்டகால லட்சியம் என்பது அக்கட்சிகளுக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. எனினும் தேசிய அளவிலான அரசியல் ஆதாயங்களுக்காக அக்கட்சிகள் பா.ஜ.,வின் அரசியல் சதுரங்க விளையாட்டை பொறுத்துக் கொள்கின்றன.
மாநில அரசியல் கட்சி தலைவர்களை பொறுத்தவரை, பா.ஜ.,வுடன் கைகோர்ப்பது உடனடி பலன்களை தருகிறது. அதாவது, மத்திய விசாரணை முகமைகளின் அமலாக்க நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், ஆபத்தும் புதைந்திருக்கிறது.
இப்படியாக, மாநிலக் கட்சிகளை, 'பயன்படுத்தி வளரும்' உத்திக்கு, நிதிஷ் குமார் மிக சமீபத்திய உதாரணமாக திகழ்கிறார்.
தேசிய கட்சிகளின் அசுர பலத்திற்கு முன்பாக, மாநில கட்சிகள் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வது என்பது இனி குதிரைக் கொம்பு தான்.
டில்லியை நோக்கி நிதிஷ் குமார் அமைதியாக நகர்ந்திருப்பது, ஒரு மூத்த முதல்வரின் பணி ஓய்வாக மட்டுமே கருதிவிட முடியாது. பா.ஜ.,வின் அதிகார கணக்கீடுகளில் கூட்டணி கட்சிகள் என்பவை பயனுள்ளவையாக இருந்தாலும், நிரந்தரமானவை அல்ல; அரசியலில் எவ்வளவு அனுபவமிக்கவர்களாக இருந்தாலும், இறுதியில் அவர்கள் மென்மையாக வெளியேற்றப்படுவர் என்பதே நிதர்சனம்.

