/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடக்கு - தெற்கு பிரிவினை
/
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடக்கு - தெற்கு பிரிவினை
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடக்கு - தெற்கு பிரிவினை
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடக்கு - தெற்கு பிரிவினை
PUBLISHED ON : ஏப் 22, 2026 04:29 AM

- ராஜ்தீப் சர்தேசாய்,மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்
பிரதமர் நரேந்திர மோடியின் மனவோட்டத்தை படிப்பது, சவாலான விஷயம். 2023ல் லோக்சபாவில் ஆரவாரத்துடன் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது குறித்த பேச்சை, பா.ஜ., தற்போது ஏன் தேர்ந்தெடுத்தது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் குறுகிய காலத்தில் பலன் பெற இந்த முடிவை எடுத்ததா? மேற்காசிய போர் காரணமாக நிலவும் பொருளாதார பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்ப எடுக்கப்பட்ட உத்தியா? பெண் சக்தியின் காவலராக பிரதமர் மோடியை முன்னிறுத்த எடுக்கப்பட்ட திட்டமா? நோக்கம் எதுவாக இருந்தாலும், இதனால் ஏற்பட்டிருக்கும் அரசியல் விளைவுகள் மிகவும் முக்கியமானவை.
பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த விவாதமாக தொடங்கிய இந்த விவகாரம், தற்போது பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியாக உருவெடுத்து இருக்கிறது. அதுதான் தொகுதி மறுவரையறை; நம் நாடு நீண்டகாலமாக கட்டுப்படுத்த நினைத்த வடக்கு - தெற்கு இடையிலான இடை வெளி மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.
வரி வருவாய்
தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முடிவு எடுத்தால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் போராட்டம் வெடிக்கும் என, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரித்து இருந்தார்.
தேர்தல் பிரசாரங்களுக்கு இடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட, மீண்டும் பழைய தி.மு.க.,வை பார்க்க நேரிடும் என, மத்திய அரசை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி இருந்தார். இது வெறும் அரசியல் ரீதியிலான எச்சரிக்கையா அல்லது ஆழமான கவலையா? இரண்டுமே என்பது தான் இதற்கான சங்கடமான விடையாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் பொது சுகாதாரம், கல்வி மற்றும் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன. இதன் காரணமாக, தென் மாநிலங்களில் மக்கள் தொகை பெரிய அளவில் பெருகவில்லை. கட்டுக்குள்ளேயே இருக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், 2026 மக்கள் தொகைக்கு பின், லோக்சபாவில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் கணிசமாக குறையும். இதனால், தொகுதி மறுவரையறை சட்டவிரோதமாகி விடாது. ஒரு நபருக்கு; ஒரு ஓட்டு என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது அமைகிறது.
லோக்சபாவுக்கு இத்தனை இடங்கள் என முடக்கி வைப்பது ஒரு தற்காலிகமான அரசியல் சமரசமே தவிர, நிரந்தர ஏற்பாடு என்றாகி விடாது. மக்கள் தொகைக்கு ஏற்ப, இன்றோ அல்லது நாளையோ லோக்சபாவுக்கான இடங்கள் மாறுதலுக்கு உட்பட்டு கொண்டே இருக்கும். இங்கு நிஜமான பிரச்னை அரசியலிலும், நம்பிக்கையிலும் தான் நிலைகுத்தி நிற்கிறது.
லோக்சபாவில் அனைத்து மாநிலங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை ஒரே சீராக, 50 சதவீதம் அதிகரிக்கலாம் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் யோசனை நிச்சயம் ஒரு தீர்வாக அமையலாம். ஆனால், இந்த தீர்வு மிக தாமதமாக முன்வைக்கப்பட்டது. அதனால், எதிர்வினைகள் வலுவடைந்தன.
இங்கு தான் மோடி அரசு கோட்டைவிட்டது. சரியான தருணத்தை தேர்ந்தெடுக்கவும் தவறிவிட்டது. அனைத்து மாநில முதல்வர்களையும் அழைத்து, அவர்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தால், பரஸ்பர நம்பிக்கை உருவாகி இருக்கும். ஆனால், மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படுகிறது என்கிற பிம்பம், வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரித்து, தென் மாநிலங்களின் தேவைகள் புறக்கணிக்கப்படும் என்ற அச்சத்தை வளர்த்தது.
அதே சமயம் வடக்கு - தெற்கு என்ற எளிமையான துருவங்களாக மட்டுமே அணுகுவதும் தவறானதாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலங்களே அச்சாணியாக இருக்கின்றன. ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதிகள் மற்றும் வரி வருவாய் ஆகியவற்றுக்கு தென் மாநிலங்களின் பங்களிப்பு அபரிமிதமானது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்கள், சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளன.
லோக்சபா பிரதிநிதித்துவத்தில் மக்கள் தொகை விவகாரம் பிரதிபலிக்கிறது; பொருளாதாரம், செயல்திறனை பிரதிபலிக்கிறது. அந்த வகையில், தென் மாநிலங்கள் செயல்திறனில் முன்னிலை வகிக்கின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டில், தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
வட மாநிலங்கள் பின்தங்கிய துறைகளில் எல்லாம் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், அந்த சிறப்பான செயல்பாடு தான் தென்மாநிலங்களுக்கான அரசியல் பலத்தை இழக்கும் வாய்ப்பை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், தேசத்தின் வாழ்வியல் யதார்த்தம் பன்முக கலாசாரம், சமூக ஒற்றுமையில் லயித்து இருக்கிறது.
பாசமழை
ஐ.பி.எல்., போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ராஞ்சியை சேர்ந்த எம்.எஸ்.தோனி சென்னைக்கு வரும்போதெல்லாம், அவரை தமிழக மக்கள் வாஞ்சையோடு வரவேற்று அரவணைத்துக் கொள்கின்றனர். தங்களின் அபிமானமிக்கவராக அவர் மீது பாசமழை பொழிகின்றனர்.
திரைப்பட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர்., திரைப்படம் தேசமெங்கும் மொழி தடைகளை கடந்து கொண்டாடப்பட்டது. இப்படி தோனியை சென் னை மக்கள் கொண்டாடுவதும், ஆர்.ஆர்.ஆர்., போன்ற திரைப்படங்கள் மொழி கடந்து வெற்றி பெறுவதும், வட இந்தியர்கள் தென் மாநிலங்களிலும், தென் இந்தியர்கள், வட மாநிலங்களில் வேலை பார்ப்பதும் நம் நாட்டு மக்கள் அரசியலை கடந்து கலாசார ரீதியாக ஒன்றிணைந்து இருப்பதை காட்டுகிறது. ஆனால், கலாசார ரீதியான ஒற்றுமை மட்டுமே அரசியல் ரீதியான பலத்தையும், உறுதியையும் கொடுத்து விடாது.
வட மாநிலங்களை போல, தென் மாநிலங்களிலும் வலுவாக காலுான்ற பா.ஜ., முயற்சித்து வருகிறது. அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும் வெளித்தோற்றத்திற்கும் ஒரு வரம்பு இருக்கிறது. ஒரு பிராந்தியத்தின் உடை அணிவது, அப்பகுதி மக்களின் மொழியை பேசுவது என முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், கட்டமைப்பு ரீதியாக எளிதில் நம்பிக்கையை ஏற்படுத்தி விட முடியாது.
பிரதமர் மோடி குருவாயூர் கோவிலுக்கு சென்றபோது, கேரள பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து இருந்தார். இதனால், அம்மாநில மக்களின் நம்பிக்கையை அவர் பெறுவாரா என்றால் அது கேள்விக்குறி தான். ஏனெனில், இத்தகைய முயற்சிகள் சிறந்த புகைப்பட தருணத்திற்கான வாய்ப்பாகவே அமையலாம். அதை தவிர, மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கும் அச்சத்தை போக்க நிச்சயம் உதவாது.
தொகுதி மறுவரையறை என்பது வெறும் எல்லைகளை வகுக்கும் தொழில்நுட்ப வேலையல்ல. இது நாட்டின் கூட்டாட்சி ஒப்பந்தத்திற்கான சோதனை. இதை சரியாக கையாள வேண்டும். தவறினால், பிராந்திய பிளவுகள், அரசியல் விரிசல்களாக மாறும். உணர்வுப்பூர்வமாக கையாண்டால் மட்டுமே, கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும்.
வேற்றுமை
மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம், பிரச்னை தொடங்குவதற்கான துாண்டுதலாக இருக்கலாம். ஆனால், அது, வருங்காலங்களில் அதிகார பகிர்வு எப்படி மாறப் போகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. இது வெறும் அரசியல் கணக்கு அல்ல. இது நம்பிக்கை சம்பந்தப்பட்டது.
வேற்றுமைகள் நிறைந்த இந்தியா போன்ற நாட்டில், ஒருமுறை நம்பிக்கை சிதைந்தால், எந்தவொரு கணக்கீடும் அமைப்பை ஒன்றிணைத்து வைத்திருக்க முடியாது.
பின்குறிப்பு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். லோக்சபாவில் எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதை விட, மாநிலங்களில் உள்ள சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி மட்டங்களில் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தலாம் என கூறியிருக்கிறார்.
நம் நாட்டிற்கு அதிக எம்.எல்.ஏ.,க்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் தான் தற்போது தேவை என்பதே அவரது வாதம். இது நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டிய யோசனை. வடக்கு - தெற்கு பிரிவினையை மீண்டும் கிளறிவிடுவதால் ஏற்படும் பாதிப்பை விட, ரேவந்த் ரெட்டி முன்வைக்கும் யோசனை பதற்றம் குறைந்ததாகவே தெரிகிறது.

