/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!
/
தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!
தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!
தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!
PUBLISHED ON : டிச 25, 2024 12:00 AM

தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!
இன்று, டிசம்பர் 25, நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். அன்புக்குரிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியின், 100-வது பிறந்த நாள். மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் சிறந்த ராஜதந்திரி அவர். நடப்பு, 21-ம் நுாற்றாண்டை நோக்கிய இந்தியாவிற்கு மாற்றத்தின் சிற்பியாக திகழ்ந்த அவருக்கு, நாடு எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும்.
கடந்த, 1998ல் அவர் பிரதமராக பதவியேற்றபோது, நம் நாடு நிலையற்ற அரசியல் காலகட்டத்தைக் கடந்து சென்றது. அதற்கு முந்தைய ஒன்பது ஆண்டுகளில், லோக்சபா தேர்தல், நான்கு முறை நடந்தது. மக்கள் பொறுமையிழந்தனர்; அரசுகளால் நன்மை வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
அந்நிலையை மாற்றியவர் வாஜ்பாய். எளிய குடும்பத்திலிருந்து வந்த அவர், சாதாரண குடிமகனின் வாழ்க்கைப் போராட்டங்களையும், மாற்றத்தை ஏற்படுத்தும் திறமையான நிர்வாகத்தின் சக்தியையும் உணர்ந்திருந்தார்.
கனவு கண்டார்
நம்மைச் சுற்றியுள்ள பல துறைகளில் வாஜ்பாய் தலைமையின் நீண்டகால தாக்கத்தை காண முடியும். தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றில், பிரமாண்டமான வேகத்தைக் காட்டியவர் அவர்.
அடல் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சாமானிய மக்களுக்கும் தொழில்நுட்பம் கிடைக்கச் செய்வதற்கான முதல் முயற்சியைத் தீவிரமாக மேற்கொண்டது. அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளையும் இணைப்பதில் தொலைநோக்குப் பார்வை கொண்டதாக இருந்தது.
இந்தியாவின் நீள அகலங்களை இணைத்த தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை இன்றும் கூட பெரும்பாலோர் நினைவுகூர்கின்றனர். பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் போன்றவற்றின் மூலம் உள்ளூர் இணைப்பை மேம்படுத்த வாஜ்பாய் அரசு மேற்கொண்ட முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.
டில்லி மெட்ரோ பணிகள் அவரது அரசின் மெட்ரோ இணைப்புக்கு உந்துதல் அளித்தன. இத்தகைய முன்முயற்சிகளால், வாஜ்பாய் அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது மட்டுமின்றி, தொலைதுாரப் பகுதிகளை நெருக்கமாகக் கொண்டு வந்து, ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வளர்த்தது.
நாடு முழுதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய பிரிவினருக்கு நவீன கல்வி கிடைக்கும் இந்தியாவை உருவாக்க, அடல் எவ்வாறு கனவு கண்டார் என்பதை, 'அனைவருக்கும் கல்வித் திட்டம்' உணர்த்தும். வாஜ்பாய் தலைமைக்கு ஓர் அற்புதமான உதாரணத்தை, 1998 கோடைக்காலத்தில் நாம் கண்டோம்.
'ஆபரேஷன் சக்தி'
அவரது அரசு அப்போதுதான் பதவியேற்றிருந்தது. இருப்பினும் மே 11 அன்று, 'ஆபரேஷன் சக்தி' என்ற பொக்ரான் சோதனைகளை இந்தியா நடத்தியது. இந்த சோதனைகள் இந்திய அறிவியல் சமூகத்தின் வலிமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தன.
இந்தியாவின் சோதனைகளைக் கண்டு, உலகமே அதிர்ச்சியடைந்தது; கோபத்தை வெளிப்படுத்தியது. எந்தவொரு சாதாரண தலைவரும், இதற்கு அடிபணிந்திருப்பார்; ஆனால் அடல் அதை, வேறுவிதமாகக் கையாண்டார். அதன்பிறகு என்ன நடந்தது... இரண்டு நாட்களுக்குப் பின், மே 13 அன்று, மற்றொரு தொகுப்பு சோதனைகளுக்கு அரசு அழைப்பு விடுத்தது. இதன் மூலம் இந்தியா உறுதியாகவும், தீர்மானகரமாகவும் நின்றது!
இதன்மூலம் அச்சுறுத்தல்கள் அல்லது அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணிந்து போகும் நாட்கள் முடிந்துவிட்டன என்ற செய்தி, உலகிற்கு தெரிவிக்கப்பட்டது. சர்வதேசத் தடைகளை எதிர்கொண்ட போதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியாக நின்றது.
இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உரிமையை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில் உலக அமைதியின் வலுவான ஆதரவாளராகவும் இருந்தது.
இந்திய ஜனநாயகத்தையும், அதை வலிமையானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அடல் அறிந்திருந்தார். இந்திய அரசியலில் கூட்டணிகளை மறுவரையறை செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்குவதில், அடல் தலைமை தாங்கினார்.
அவர் மக்களை ஒன்றிணைத்து, வளர்ச்சி, தேச முன்னேற்றம் மற்றும் பிராந்திய லட்சியங்களுக்கான சக்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை மாற்றினார். ஒரு சில எம்.பி.,க்களை மட்டுமே கொண்ட ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், சர்வ சக்தி வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் வலிமையை அசைக்க அவரது வார்த்தைகள் போதுமானதாக இருந்தன.
ஒரு ஓட்டு
பிரதமராக இருந்தபோது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தனக்கே உரிய பாணியிலும், பொருளாழத்துடனும் எதிர்கொண்டு மழுங்கச்செய்தார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்றியபோதும், அவரது வாழ்க்கையில் யாருக்கும் எதிராக ஒருபோதும் கசப்புணர்வை அவர் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், அவரை துரோகி என்று அழைக்கும் அளவுக்கு, காங்கிரஸ் தரம் தாழ்ந்து போனது!
சந்தர்ப்பவாத வழிகளைப் பயன்படுத்தி, அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவராக அவர் இருந்ததில்லை. குதிரை பேரம் மற்றும் இழிவான அரசியல் பாதையைப் பின்பற்றுவதற்கு பதிலாக, 1996-ல் அவர் பதவியை ராஜினாமா செய்யவே விரும்பினார். 1999-ல் அவரது அரசு, 1 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
அப்போது நடந்த முறைகேடான அரசியலுக்கு சவால் விடுக்குமாறு, நிறைய பேர் அவரிடம் கூறினர். ஆனால், அவர் விதிகளின்படி செல்ல விரும்பினார். இறுதியில், அவர் மக்கள் தந்த மற்றொரு மகத்தான வெற்றியுடன் திரும்பி வந்தார்.
நம் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதிலும், அடல் உயர்ந்து நிற்கிறார். டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் உயிர்த்தியாகம் அவரை மிகவும் பாதித்தது. பல ஆண்டுகளுக்குப் பின், அவர் அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் துாணாகத் திகழ்ந்தார்.
அடையாளம்
நெருக்கடி நிலைக்குப் பின், 1977 தேர்தலுக்கு முன், அவர் தனது சொந்தக் கட்சியான ஜனசங்கத்தை, ஜனதா கட்சியில் இணைக்க ஒப்புக்கொண்டார். இது அவருக்கு ஒரு வேதனையான முடிவாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்போது அவருக்கும், மற்றவர்களுக்கும், அரசியலமைப்பைப் பாதுகாப்பது மட்டுமே முக்கியமானதாக இருந்தது.
அடல், இந்தியக் கலாசாரத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற பின், ஐக்கிய நாடுகள் சபையில் ஹிந்தியில் உரையாற்றிய முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த ஒரு செயல், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் மீதான அவரது மகத்தான பெருமிதத்தை வெளிப்படுத்தி, உலக அரங்கில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச்சென்றது.
அடலின் ஆளுமை, ஈர்க்கும் காந்தசக்தி நிறைந்தது. இலக்கியம் மற்றும் கருத்து வெளிப்பாட்டின் மீதான காதலால் அவரது வாழ்க்கை வளம் பெற்றது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர். ஊக்கமளிக்கவும், சிந்தனையைத் தூண்டவும், ஆறுதல் அளிக்கவும் அவர் சொற்களைப் பயன்படுத்தினார். அவரது கவிதைகள், பெரும்பாலும் உள்மனப் போராட்டங்கள் மற்றும் தேசத்திற்கான நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கின்றன. இவை அனைத்து வயதினரிடமும், தொடர்ந்து எதிரொலித்தபடி இருக்கின்றன.
எங்கள் பாக்கியம்
பா.ஜ.,வில் என்னைப் போன்ற பல தொண்டர்கள், அடல் போன்ற ஒருவருடன் கலந்துரையாடவும், அதன்வழி கற்றுக்கொள்ளவும் முடிந்தது, எங்களின் பாக்கியம். பா.ஜ.,வின் அடித்தளம் அவர். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மகத்தான தலைவர்களுடன், கட்சியை, அதன் துவக்க காலத்திலிருந்து அவர் வளர்த்தார்.
சவால்கள், பின்னடைவுகள், வெற்றிகள் மூலம் அதை வழிநடத்தினார். சித்தாந்தம், ஆட்சி அதிகாரம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்தபோதெல்லாம், அவர் முந்தையதையே தேர்ந்தெடுத்தார். காங்கிரசுக்கு மாற்றான ஓர் உலகப் பார்வை சாத்தியம் என்றும், அத்தகைய உலகப் பார்வையை வழங்க முடியும் என்றும், அவரால் நாட்டு மக்களை நம்பவைக்க முடிந்தது.
நல்லாட்சி
அவரது 100-வது பிறந்த நாளில், அவரது கொள்கைகளை நனவாக்கவும், இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம். நல்லாட்சி, ஒற்றுமை, முன்னேற்றம் என்ற அவரது கொள்கைகளை உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம். நம் நாட்டின் ஆற்றல் மீது அடல் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, உயர்ந்த இலக்கை அடையவும், கடினமாக உழைக்கவும் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது!
- நரேந்திர மோடி -